சூப்பர்! இனி கோயில்களில் பிரசாதங்களுக்கு ஆவின் நெய்.. தமிழக அரசு உத்தரவால் மீண்டு(ம்) வரும் ஆவின்
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிப்பது, விளக்கு ஏற்றுவது உள்ளிட்டவற்றுக்கு நெய்யை ஆவின் நிறுவனத்தின் மூலமாக மட்டும் கொள்முதல் செய்ய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் மிக முக்கிய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் எனப்படும் ஆவின்.
இதன் மூலமே தமிழ்நாடு முழுவதும் இருந்து கால்நடை வளர்ப்பவர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, பதப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின்
தமிழ்நாட்டில் முக்கிய பால் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தாலும் ஆவின் நிறுவனத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் காரணமாக வருவாய் அதிகரித்த போதிலும், நிறுவனத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல் குறித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி வருகிறது.

கோயில்
அதேபோல அரசுத் துறைகள் ஆவின் நிறுவனத்தில் இருந்து தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்தாலே வருவாய் அதிகரிக்கும் என்றும் ஒரு தரப்பினர் கூறினர். இந்தச் சூழ்நிலையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிப்பது, விளக்கு ஏற்றுவது உள்ளிட்டவற்றுக்கு நெய்யை ஆவின் நிறுவனத்தின் மூலமாக மட்டும் கொள்முதல் செய்ய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தயார்
இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள், இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும், ஆவின் நிறுவனத்தில் 15 மி.லி. பேக்கிங்கில் இருந்து 20 கிலோ வரையிலான எடை கொண்ட பேக்கிங் வரை விற்பனைக்குத் தயாராக உள்ளன என்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.

ஆவின் நெய்
கோயில் கருவறை, பிரகாரங்களில் தரமற்ற நெய்யைப் பயன்படுத்தி விளக்கு, தீபம் ஏற்றுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவும், பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தவும், கோயில்களில் விளக்கு ஏற்றுவது, நைவேத்திய பிரசாதங்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களை வரும் ஜன.1-ம் தேதி முதல் ஆவின் நிறுவனம் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை
முன்னதாக தீபாவளி சமயத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் இனிப்புகள் வாங்க டென்டர் விடப்பட்டிருந்தது. அந்த டெண்டர் விதிமுறையில் கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்த நிறுவனங்களுக்கே டெண்டர் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு டென்டர் வழங்கவே இந்த விதிமுறை போடப்பட்டிருப்பதாகவும் ஏன் ஆவின் நிறுவனத்திடம் இருந்து இனிப்புகளை வாங்கக் கூடாது எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

தீபாவளி இனிப்புகள்
இருப்பினும், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு குறைந்த நிலையில் இனிப்புகளை வழங்கினால் ஆவின் நிறுவனத்தில் இருந்து இனிப்புகளை வாங்கத் தயார் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார். இந்த விஷயம் பூதாகரமானதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறைக்கு ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மீண்டு வரும் ஆவின்
இப்படி அடுத்தடுத்து அரசுத் துறைகள் ஆவின் நிறுவனத்தில் இருந்தே பொருட்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் ஆவின் நிறுவனத்திற்கு உள்ள பொருளாதார சிக்கல் விரைவில் சீராகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அறநிலையத்துறையின் இந்த உத்தரவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications