கூட்டணிக்கு ஆள் இல்லை! பெரிய தலைவர்கள் போட்டியிடலை! ஆனா பாஜக 2வது பெரிய கட்சி? அது எப்படி? குழப்புதே
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக இரண்டாவது பெரிய கட்சி என்று சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் களநிலவரம் பாஜகவிற்கு சாதகமாக இருக்கிறதா? உண்மையில் கருத்து கணிப்புகள் சொல்வது போல பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0
தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பாஜக முந்தும்: திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல்வேறு கணிப்புகள் பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும் என்று கணித்து உள்ளன.

பல கணிப்புகள்: தமிழ்நாட்டை சேர்ந்த சில செய்தி நிறுவனங்கள் கூட பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக மாறும், அல்லது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு அடுத்தபடியாக வாக்கு சதவிகித அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சந்தேகம்: ஆனால் களநிலவரம் பாஜகவிற்கு சாதகமாக இருக்கிறதா? உண்மையில் கருத்து கணிப்புகள் சொல்வது போல பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சந்தேகம் எழுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
காரணம் 1 - பெரிய தலைவர்கள் போட்டி இல்லை; பாஜக வளர்ந்த கட்சி என்றால் ஏன் அண்ணாமலை, எல் முருகன் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக சார்பாக தமிழ்நாட்டில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான இரண்டு பேர் தேர்தலில் போட்டியில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது .
அதன்படி நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எல் முருகன் மீண்டும் தேர்வாகி உள்ளார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகி சென்றதால் அவர் போட்டியில்லை என்று உறுதியாகிவிட்டது.
இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். கோவை தேர்தலில் கண்டிப்பாக நிற்க மாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் பாஜகவின் அண்ணாமலை.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் இரண்டு டாப் தலைவர்கள் போட்டியிடாத காரணத்தால்... பெரிய கட்சி ஆகிட்டோம்னு சொல்றீங்க போட்டியிட வேண்டியதுதானே என்ற தார்மீக கேள்வி எழுகிறது.

கருத்துக் கணிப்புகளில் சொல்வதை போல பாஜக இரட்டை இலக்க வெற்றியோ அல்லது 18 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளோ வாங்குமானால் ஏன் முருகன், அண்ணாமலை மோடி உள்ளிட்டோர் தமிழகத்தில் போட்டியிட விரும்பவில்லை. தலைவர்கள் ஓட்டம் பிடிப்பது ஏன் என்று விவாதம் எழுந்துள்ளது.
காரணம் 2 - கூட்டணி வர ஆள் இல்லை: பாஜக இரண்டாவது பெரிய கட்சி என்றால் கூட்டணி கட்சிகள் ஓடி வந்து கூட்டணி வைத்திருக்க வேண்டுமே.. ஏன் வைக்கவில்லை. பாமக, தேமுதிக கமலாலயம் வாசலில் காத்திருக்க வேண்டுமே? ஏன் நிற்கவில்லை. பாஜகவிற்கு 20 சதவிகிதம் என்றால்.. பாமகவின் 7 சதவிகிதம், தேமுதிகவின் 2 சதவிகிதத்தை சேர்த்து 29 சதவிகிதம் எடுத்து தேர்தல் முடிவையே மாற்றலாமே.. ஏன் இவர்கள் பாஜகவை தேடி செல்லவில்லை.. அப்படி என்றால் கள நிலவரம் கலவரமாக உள்ளது. கருத்துக் கணிப்பில் மட்டுமே பாஜக பெரிதாக காட்டப்படுகிறது.. நிஜத்தில் அப்படி இல்லையே?
காரணம் 3 - சிறிய தலைவர்கள்: அதைவிடுங்க.. பிரதமர் மோடி கூட்டத்திற்கே வாசன் மாதிரி தலைவர்கள்தான் வந்தனர். பெரிய கூட்டணி தலைவர்கள் யாரும் வரவில்லை.கூட்டணி தலைவர்களை மேடைக்கு ஏற்றுவேன் என்று கூறிய அண்ணாமலை ஏமாற்றமே அளித்தார். பாஜகவோடு ஓபிஎஸ், சசிகலாவை சேர்த்து பயணிக்கவும் இன்னும் முடிவு எடுக்கவில்லை.
காரணம் 4 -அதிமுக சீண்டவில்லை: நாங்கள் கூட்டணி கதவை திறந்து வைத்து இருக்கிறோம் என்று அதிமுகவை அமித் ஷாவே இறங்கி வந்து அழைத்தும் கூட.. கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக கூறிவிட்டது. பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தால்.. ஏன் அதிமுக இப்படி சொல்ல வேண்டும். ஏன் பாஜகவை சீண்டாமல் அதிமுக தனியாக நிற்க துணிய வேண்டும்?
காரணம் 5 - பூத் கமிட்டி இன்னும் அமைக்கப்படவில்லை: அதெல்லாம் விட.. இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லும் பாஜகவிற்கு சென்னையிலேயே சில தொகுதிகளில் பூத் கமிட்டி இல்லை. தெற்கில், டெல்டாவில் பெரிதாக பூத் கமிட்டிகள் இல்லை. அப்படி இருக்க காற்றில் எங்கே பாஜக கோலம் போடும்? எப்படி போடும்?
கூட்டணி வைக்க ஆள் இல்லை.. கட்சியின் டாப் தலைவர்கள் போட்டியில்லை.. பூத் கமிட்டியும் இல்லை.. ஆனால் கருத்துக் கணிப்பில் மட்டும் பாஜக முன்னிலை.. களத்தில் இல்லை.. அப்படி இருக்க பாஜக எப்படி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications