திருத்தணி ரயிலில்.. வடமாநில தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம்! தமிழக அரசுக்கு பறந்த நோட்டீஸ்!
சென்னை: திருத்தணி செல்லும் ரயிலில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளி, சிறார்களால் கத்தியால் தாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு, மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
ஒடிசாவை சேர்ந்த சுராஜ் எனும் தொழிலாளியை, கடந்த டிச.28ம் தேதி திருத்தணி செல்லும் ரயிலில் வைத்து 17 வயதான சிறார்கள் கத்தியால் தாக்கி, அதை வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் என்பவர்கள், தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு பெரிய அளவில் பங்காற்றுகிறார்கள். இப்படி இருக்கையில், அவர்கள் மீதான தாக்குதல் என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், சட்டம் ஒழுங்கு நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட சிறார்கள் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால், படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளி மாயமானார்.
இப்படி இருக்கையில் இந்த சம்பவம் டெல்லியில் உள்ள மனித உரிமை ஆணையம் கவனத்தில் கொண்டிருக்கிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆணையம், தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தது.
இப்படி இருக்கையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதேபோல, மாயமான தொழிலாளியை கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளிக்கு ரூ.2 லட்சம் வழங்க ஏன் உத்தரவிடக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications