26 மணி நேரம்.. 15000 கிமீ.. 36000 அடி உயரத்தில்.. ஒரு உயிரை காக்க நடந்த போராட்டம்.. இதுதான் சென்னை!
சென்னை: பெண் ஒருவரின் உயிரை காப்பதற்காக மிக நீண்ட விமான பயணம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. உலகில் சமீபத்தில் நடந்த மிக நீண்ட மருத்துவ ரீதியான விமான பயணம் இது என்றும் கூறப்படுகிறது. மெய்சிலிர்க்க வைக்கும் அந்த விமான பயணத்தில் நடந்தது என்ன?
பெங்களூரில் உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் அந்த பெண். 67 வயதாகும் அவர் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாகாணத்தில் தனது மகன், மகள்களுடன் வசித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில வருடங்களாக இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக அவர் அமெரிக்காவில் சிறப்பு சிகிச்சையும் மேற்கொண்டார்.

அமெரிக்கா
ஆனால் அமெரிக்காவில் இவர் மேற்கொண்ட சிகிச்சை பெரிதாக பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின்பும் கூட அவரின் உடல்நிலை சரியாகாமல் இதயத்தில் பிரச்சனை நிலவி வந்தது. அமெரிக்காவில் வேறு மருத்துவமனைகளுக்கு சென்றாலும் அவர்கள் ஏற்கனவே செய்த சிகிச்சையைத்தான் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு பல கோடி கேட்டுள்ளனர்.

சிகிச்சை
இந்த நிலையில்தான்.. உலகில் பல நாடுகளிலும் நோயாளிகள் நோயை தீர்க்க முடியவில்லை என்றால் உடனே அவர்கள் நாடும் நகரம் நம் சிங்கார சென்னைதான்! பல நாட்டு மருத்துவர்கள் செய்ய முடியாத சிகிச்சைகளை கூட சென்னை மருத்துவர்கள் செய்துள்ளனர். அதேபோல்தான் அந்த பெண்ணுக்கும் சென்னையில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அவரின் உடல்நிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக மோசமானது. இதனால் சென்னை செல்ல முடிவு எடுக்கப்பட்டது.

விமான பயணம்
இதனால் உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக ICATT என்ற தனியார் ஆம்புலன்ஸ் விமான நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்து அந்த பெண்ணை சென்னை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்காவின் போர்ட்லாண்டில் இருந்து சேலஞ்சர் 605 விமானத்தில் அவர் ஏற்றப்பட்டார். இது மீடியம் அளவிலான ஜெட் ஆம்புலன்ஸ் விமானம் ஆகும். இதில் ஐசியூ வசதியும் உள்ளது.

சென்னை
இதில் அந்த பெண்ணுடன் மூன்று மருத்துவர்கள், 2 நர்ஸ்கள் இருந்துள்ளனர். அங்கிருந்து அந்த விமானம் 7.5 மணி நேரம் பயணம் செய்து ஐஸ்லாந்தில் உள்ள Reykjavik விமான நிலையம் வந்துள்ளது. துருக்கியில் இருக்கும் இஸ்தான்புல்லுக்கு 6 மணி நேரத்தில் சென்றுள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காக இந்த பிரேக் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. துருக்கியில் ஒரு மருத்துவர் இறங்கிய நிலையில் வேறு மருத்துவர் விமானத்தில் பயணித்தார்.

துருக்கி
துருக்கியில் பின்னர் Diyarbakir என்ற இன்னொரு விமான நிலையத்திற்கு அந்த விமானம் சென்றது. இதற்கு 4 மணி நேரம் ஆனது. இது அவரின் உடல்நிலையை கண்காணிக்க எடுக்கப்பட்ட பிரேக். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானம் நேராக வந்தது. சென்னையில் நேற்று காலை 2.10 மணிக்கு விமானம் தரையிறங்கியது. மொத்தமாக 26 மணி நேரம்.. 15000 கிமீ.. சராசரியாக 36000 அடி உயரத்தில் பயணம் செய்து அந்த பெண் சென்னை கொண்டு வரப்பட்டார்.

அப்போலோ
சென்னையில் உடனே அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அந்த பெண்ணை காப்பதற்கான சிகிச்சை விரைவில் தொடங்க உள்ளது. அவருக்கு தொடக்க கட்ட பாதுகாப்பு, சிகிச்சை ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. இந்த விமான பயணத்திற்காக கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வர செலவு ஆகி உள்ளது. அதோடு சென்னையில் இவர்கள் அந்த பெண்ணுக்கு இன்சூரன்ஸ் பயன்படுத்த முடியும்.

அமெரிக்கா சிகிச்சை
ஆனால் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளவே இந்த விமான பயணத்தை விட அதிக செலவு ஆகும் என்று கூறி இருக்கிறார்கள். இதனால்தான் மருத்துவத்தில் சிறப்பாக இருக்கும் சென்னைக்கு அந்த பெண்ணை அவரின் உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர். உலகில் சமீபத்தில் நடந்த மிக நீண்ட மருத்துவ ரீதியான விமான பயணம் இது என்றும் கூறப்படுகிறது. விரைவில் அந்த பெண் முழுமையாக குணமடைவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications