‛‛ஆமா, அனைவருக்கும் மேலானவர் தான் இந்த இளையராஜா’’.. பாடல் காப்புரிமை வழக்கில் ஹைகோர்ட்டில் வாதம்
சென்னை: பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் ‛‛ஆமா அனைவருக்கும் மேலானவர் தான் இந்த இளையராஜா'' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் முன்வைக்கப்பட்டது.
இளையராஜா... தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த இசையமைப்பாளர். காலத்தால் அழியாத பல திரைப்பட பாடல்களை நமக்கு அளித்தவர். அவரது இசையில் வெளிவந்த பாடல்கள் முதியவர்கள், நடுத்தர வயது கொண்டோர், இளைஞர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ‛பேவரைட்'டாக உள்ளது.

இந்நிலையில் தான் இளையராஜாவின் பாடல்களை பல நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து பயன்படுத்தி வருகின்றன. அதன்படி 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.
ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் கூட எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்துவதாக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்து 2019ல் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ‛‛இளையராஜாவுக்கு பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை உள்ளது. மேலும் தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டது. பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளரிடம் உரிமையை பெற்றுள்ளதால் பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனம் மற்றும் இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதம் வைத்தனர். இசை நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛திரைப்படத்துக்காக தயாரிப்பாளரிடம் ஊதியம் பெறும் இசையமைப்பாளர் ராயல்டி தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்துவிடுகிறார். இந்த விஷயத்தில் இளையராஜாவுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும்.
1970, 80 மற்றும் 90களில் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் இருந்த ஈர்ப்பு, தற்போது இல்லை. அதோடு ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் மூலம் இளையராஜா பெற்ற வருமானத்திற்கான கணக்குகளை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் '' என வாதம் வைக்கப்பட்டது. இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து தொடர்ந்து வாதாடிய இசை நிறுவன வழக்கறிஞர் ஒரு கட்டத்தில், ‛‛இளையராஜா தான் தான் அனைவருக்கும் மேலானவர்'' என நினைக்கிறார் என்று தெரிவித்தார்.
இந்த வேளையில் குறுக்கீட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பரசரண், ‛‛ஆமா இளையராஜா அனைவருக்கும் மேலானவர் தான்'' எனக்கூறினார். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்'' என தெரிவித்தார். இதனால் பரபரப்பு தொற்றியது. இதையடுத்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications