தமிழிசையிடம் வருந்திய திருமாவளவன்.. முடிவுக்கு வரும் தலைவர்களின் பரபரப்பான மோதல்! என்ன நடந்தது?
சென்னை: ‛‛தமிழிசை சவுந்தராஜன் மீது மிகுந்த மதிப்பும், நல்ல நட்பும் உள்ளது. நான் கூறிய கருத்து காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன்’’ என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழிசை சவுந்தராஜனுக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். என விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பேசியது சர்ச்சையான நிலையில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு என்பது நடந்தது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் க்டசியின் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்றும், அகில இந்திய அளவில் மது விலக்கை அமல்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக இந்த மது ஒழிப்பு மாநாட்டு நடைபெற தேதி குறிக்கப்பட்ட நிலையில் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு பேட்டியளித்தார். அதில், ‛‛மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார். மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு காரணமா? என்பது தெரியவில்லை” என கூறியிருந்தார்.
இதற்கு மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பதிலடி கொடுத்தார்.அப்போது அவர், ‛‛திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடிய ஆள் என்று சொல்கிறார்கள். அக்காள் தமிழிசை அவர்களே நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போல் தான் நானும், எனக்கும் அந்த பழக்கம் இல்லை’’ என்றார்.
திருமாவளவன் கேட்கும் மதுவிலக்கு உண்மையில் சாத்தியமா.. திமுக தயங்குவதன் பின்னணி என்ன?
இதற்கு சென்னையில் பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்தார். அதில், ‛‛திருமாவளவன் ஒரு மாநாட்டை நடத்தினார். அதில் காந்தி எனக்கு பிடிக்காது. காந்தி இந்து மத கொள்கையை பின்பற்றியவர். சாகும்போது கூட ஹேராம் என கூறிவிட்டு தான் இறந்தார் என்று கூறி தனது துவேசத்தை கக்கி இருக்கிறார். காந்தியை இவர்கள் தினம் தினம் கொன்று கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே காந்தியின் சிலைக்கு அவர் மாலை இடவில்லை என நான் கூறிய கருத்தை கொச்சைப்படுத்தி மோசமாக பேசி இருக்கிறார். நாகரீகம் இல்லாத தலைவர் என்பதை அவர் நிரூபித்துவிட்டார்’’ என கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் தமிழிசை சவுந்தரராஜன் குறித்த பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‛‛ மது ஒழிப்புக்காக போராடிய காந்தி பிறந்தநாளில் மாநாடு நடத்தினோம். அவரது சிலைக்கு மரியாதை செலுத்த சென்றபோது, ஆளுநர் வந்த பிறகு தான் அனுமதிக்க முடியும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.மாநாட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் காத்திருக்க முடியவில்லை. மாலை அணிவிக்கத்தான் காந்தி மண்டபம் சென்றேன். இதை குற்ற உணர்வில் திரும்பி சென்றதாக கூறுவது எப்படி சரி?
தமிழிசை சவுந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பும், நல்ல நட்பும் உள்ளது. அவரது விமர்சனத்தால் என் மனம் புண்படாதா? எனக்கு ஏதோ ஈடுபாடு இருப்பதாக மறைமுகமாக சொல்ல வந்தார். எனவே, உங்களை போல் தான் நானும் என்று சொன்னேன். இதில் தரம் தாழ்ந்து பேச என்ன இருக்கிறது என தெரியவில்லை. இது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.
எனக்கு அவருடன் நீண்ட கால பழக்கம் இருக்கிறது. தமிழிசை, அவரது கணவர், அவரது தந்தை ஆகியோர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அவரது தந்தை மாநாட்டை பாராட்டி 2 பக்க வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதை நேரமின்மை காரணமாக படிக்க முடியாமல் போனது. அப்படி நாங்கள் பெரிதும் மதிக்கக் கூடிய குடும்பத்தை சார்ந்தவர் அவர். அதில் மாற்றுக் கருத்தில்லை. என்னைக் காயப்படுத்தும் வகையில் பொதுமக்களிடையே திருமாவளவனுக்கு மது ஒழிப்பு கொள்கையில் முரண்பாடு இருப்பதாக சொன்னதால் நான் பதிலளித்தேன்” என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications