அக்காவும், தம்பியும்.. திமுகவை வீட்டிற்கு அனுப்புகிறோமா இல்லையா பாருங்கள்.. தமிழிசை ஆக்ரோஷம்!
சென்னை: தமிழ்நாட்டில் அக்காவும், தம்பியும் சேர்ந்து 2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர அண்ணாமலையுடன் இருப்பேன் என்று கூறிய அவர், முதல்வர் மருந்தகம் திட்டம் மத்திய அரசை பார்த்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், என்னை இனி யாரும் உயரம் குறைவு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தொண்டர்களால் உயர்ந்து நிற்பவள் நான்.

இது பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மட்டுமல்ல. இது 2026ல் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முதல் கூட்டம் இது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் ஆயிரம் மருந்தகங்களை திறக்கப் போகிறார்களாம்.
இதைவிட காப்பியடிக்க கூடிய ஒரு முதல்வரை பார்க்க முடியாது. 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரதமர் மக்கள் மருந்தகங்களை திறந்து வைத்துவிட்டார். இம்முறை மருத்துவத்திற்கு அதிகளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கேன்சர் மருத்துவமனை கொண்டு வரப்படவுள்ளது. ஏனென்றால் இன்றளவில் 9 பேரில் ஒருவருக்கு கேன்சர் வருகிறது.
அண்ணாமலை இருப்பதே சிலருக்கு பயமாக இருக்கிறது. அவர் இருந்தால், எங்களுக்கு வெற்றி என்று திமுகவினர் சொல்கிறார்கள். அண்ணாமலை இருந்தால் பாஜகவுக்கு வெற்றி என்று நாங்கள் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளோம். இப்போது பயத்தில் அவர்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்தை தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறது, காவி தான் தமிழகத்தை ஆளப் போகிறது.
பெரியாரை பற்றி தவறாக பேசினால் ஓட்டு கிடைக்காது என்று கூறுகிறார்கள். பெரியாரின் பெயருக்கு களங்கள் விளைவித்தால் ஓட்டு கிடைக்காது என்று கனிமொழியும் கூறியிருக்கிறார். தூத்துக்குடியில் போட்டிபோடுவதற்கு முன் நான், பனங்காட்டு நரி.. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன் என்று கூறினேன். அதற்கு கனிமொழி, ட்விட்டர் ஐடியில் உள்ள பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பன மரத்தை வைத்தார்.
பெரியாரை விடவும் பனமரம் அதிக வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் என்று கனிமொழி நினைத்தார். அதனை இன்று மாற்றி பேசுகிறார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி-க்கள் சமஸ்கிருதம், இந்தி என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து ஒரு தமிழ்நாட்டு பெண் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். அதற்காகவாது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமருக்கு மாலை போட வேண்டும்.
1967ல் கலைஞர் பேசும் போது, அண்ணன் இருக்கிறார்.. தம்பி நான் இருக்கிறேன். அண்ணனும், தம்பியும் சேர்ந்து காங்கிரஸை வீட்டிற்கு அனுப்புவோம் என்று பேசுவதை கேட்டிருக்கிறேன். இன்று சொல்கிறேன்.. இந்த அக்காவும், தம்பியும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புகிறோமா, இல்லையா என்று பாருங்கள். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு எப்போதும் அண்ணாமலையுடன் நானிருப்பேன். அண்ணா வளர்தத்து தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ், பெரியார் வளர்த்த தமிழ் அல்ல, பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications