எனது முதல் திருமண நாளை சிறையில் கொண்டாடினேன்.. திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன பிளாஷ் பேக்
சென்னை: திருமணம் நடந்த சில நாட்களிலேயே நான் கைது செய்யப்பட்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தனது முதலாண்டு திருமண நாளை சிறையில் கொண்டாடினேன் என்றும் கூறிய ஸ்டாலின் இதெல்லாம் வரலாறு என்று சொன்னார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் சிரிப்பதில்லை என்று காந்தி கூறினார். நான் சிரிக்க வேண்டும் என்றால் நீங்கள் காரணமாக இருக்க வேண்டும் என்று திருமண விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும் என்றும் முதல்வர் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வீரராக திகழ்ந்தவர் வேணு. உடல் நிலை சரியில்லாத நேரத்தில் கூட அறிவாலத்திற்கு வருவார் வேணு. அவரை நான் உரிமையோடு கடிந்து கொள்வேன். உடல் நலனை பார்க்காமல் திமுகவிற்கு தொண்டாற்றுவார் வேணு. இந்த விழாவின் தலைமை பொறுப்பேற்று நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களுக்கு பல்வேறு பணியாற்றியுள்ளார் வேணு.

திமுக நடத்திய அனைத்து போராட்டங்களிலும் ஈடுபடுத்திக்கொண்டவர் வேணு. நெருக்கடி நிலை காலத்தில் திமுக ஆட்சியை கலைத்து விட்டு 500க்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத்தனர். சென்னை சிறைச்சாலையில் நானும், டி.ஆர் பாலுவும் அடைக்கப்பட்டிருந்த போது நம்மோடு இருந்தவர்தான் வேணு. அப்படி தியாக சீலர் வேணுவின் பேத்திக்கு மண விழா நடைபெறுகிறது. மண மக்கள் உங்களுக்கு பிறக்கின்றன பிள்ளைகளுக்கு அன்பான தமிழ் பெயரை சூட்டுங்கள். வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய் வாழுங்கள் என்று வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.
திருமணம் நடைபெற்றதில் நான் வேணுவை விட 2 நாட்கள் சீனியர். ஓராண்டு காலம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருந்த போது என்னுடைய முதலாண்டு திருமண நாளையும் வேணு தனது முதலாண்டு திருமண நாளையும் சிறையில்தான் கொண்டாடினோம். இதெல்லாம் வரலாறு இந்த வரலாறு சிலருக்கு ஏன் நமது பிரதமருக்கு தெரியவில்லை என்று சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேச ஆரம்பித்தார். திமுக ஆரம்பத்தில் இருந்தே குடும்ப அரசியல்தான் செய்கிறது. அறிஞர் அண்ணா அனைவரும் 'தம்பி' என்று கூறினார். அதே போல தலைவராக இருந்த கருணாநிதி அனைவரும் உடன்பிறப்பே என்று அழைப்பார். கூட்டமோ, மாநாடோ, போராட்டமோ எதுவாக இருந்தாலும் மக்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக குடும்ப அரசியல் செய்வது உண்மைதான் அதே போல தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் குடும்பம்தான் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, திமுகவுக்கு வாக்களித்தால், கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், சோனியா காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். உங்கள் சந்ததிகள் முன்னேற்றத்திற்கும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மோடியின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருமண விழா மேடையில் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications