உயிர் பிழைப்போம் என்று நினைக்கவில்லை..இறைவனுக்கு நன்றி..ரயில் விபத்தில் சிக்கி மீண்டவர் பேட்டி
சென்னை: இப்படி ஒரு விபத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை நான் உயிர் பிழைப்பேன் என்று நினைக்கவில்லை என்று ரயில் விபத்தில் சிக்கி மீண்டு சென்னைக்கு திரும்பியவர் கூறியுள்ளார். எங்கும் மரண ஓலம் கேட்டது அச்சத்தில் பலரும் அலறிக்கொண்டிருந்தனர் அவர்களின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினோம் என்று கூறிய அந்த பயணி உயிர் பிழைக்க வைத்த கடவுளுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.
கொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து வந்த போது பாஹநகர் பஜார் நிலையம் அருகே விபத்தில் சிக்கி தடம் புரண்டது. பெங்களூரில் இருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ1, ஏ2 பெட்டிகளும் மற்றும் பி2 முதல் பி9 பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்தன. இதே போன்று, பெங்களூர்- ஹவுரா ரயிலில் 4 பெட்டிகளும் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்து நடந்த போது, நிலநடுக்கம் ஏற்பட்டது போல ரயிலின் பெட்டிகள் குலுங்கியதாகவும், என்னவென்று தெரியாமல் அச்சத்தில் உறைந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். முன்பதிவு இல்லாத பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் அதிகம் சேதம் அடைந்ததாக அதில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். ரயில் விபத்தில் உயிர் பிழைத்த பயணிகள் 50 பேர் புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பியுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பயணி, தான் உயிர்பிழைத்தது அதிசயம் என்று கூறினார். தன்னை பிழைக்க வைத்த கடவுளுக்கு நன்றியும் கூறியுள்ளார்.
விபத்து நடந்த போது பெட்டிகள் குலுங்கின. படுக்கையில் இருந்து நாங்கள் உருண்டு விழுந்தோம். எங்கள் மீது பலர் விழுந்தனர். எங்கள் பெட்டியில் பயணம் செய்தவர்களுக்கு எதுவும் ஆகவில்லை பாதுகாப்பாக இருந்தோம் அதே நேரத்தில் பக்கத்து பெட்டியில் இருந்தவர்களுக்கு பலத்த அடிபட்டது. நாங்கள் பெட்டியை விட்டு கீழே இறங்கிய பிறகுதான் மிகப்பெரிய கோர விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. ஏராளமானோர் அழுது கொண்டிருந்தனர். உள்ளூர் கிராம மக்கள் உடனடியாக வந்து காயமடைந்த பயணிகளை மீட்டனர். ஆம்புலன்ஸ் வந்த பிறகு அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அரை மணி நேரத்தில் படிப்படியாக ஆம்புலன்ஸ் வந்து விட்டது.
அழுது கொண்டிருந்தவர்களின் கைகளைப் பிடித்து நாங்கள் ஆறுதல் கூறினோம். பலருக்காகவும் பிரார்த்தனை செய்தோம் என்றும் விபத்தில் சிக்கி மீண்டு சென்னை திரும்பியவர் கூறினார். 7 மணிக்குதான் அந்த விபத்து நடந்தது. நான் கடைசி பெட்டியில் A2வில் இருந்தேன். ஒரு ரயில் பெட்டி தூக்கி வீசப்பட்டிருந்து. மரண ஓலம் கேட்டது. கை கால் முறிந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்து. அருகில் இருந்த கிராம மக்கள்தான் தண்ணீர் கொடுத்து காப்பாற்றினர் என்றும் சென்னை திரும்பிய பயணி கூறினார். அங்கிருந்த நிலைமையை பார்த்த போது 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று நினைத்தோம் நான் தப்பி பிழைத்தது அதிசயம்தான் என்றும் அந்த பயணி தெரிவித்தார்.
சிக்னல் கோளாறு என்றுதான் கூறினார்கள். உயிரிழந்தவர்களின் கால்கள் தலை மீது தொங்கிக்கொண்டிருந்தது என்றும் பயணி கூறினார். உள்ளூர் கிராம மக்களே உணவு, தண்ணீர் கொடுத்து காப்பாற்றினர் என்றும் அந்த பயணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications