அரசியலில் சேரப்போறேனா.. சிரிப்புத்தான் வருது.. Zoho ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட பரபரப்பு பதிவு
சென்னை: நான் அரசியலில் சேருவது பற்றி ஒரு செய்தி பரவி வருவது பற்றி கேள்விப்பட்டேன். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்தது.. உங்கள் வேலையை பாருங்கள் என்று ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளார். ஸ்ரீதர் வேம்பு அரசியலில் சேர உள்ளதாக பலரும் தகவல்களை பரப்பி வந்த நிலையில், அதனை அவர் திட்டவட்டமாக தற்போது மறுத்துள்ளார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஜோஹோ கார்ப்பரேஷன்.. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும், அமெரிக்கா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட 21க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை தொடங்கிய ஸ்ரீதர் வேம்பு அதன் தலைமை செயல் அதிகாரியாக அண்மைக்காலம் வரை இருந்தார்.

அதேநேரம் தனது சொந்த ஊரான தென்காசியில் ஜோஹோவின் கிளையை ஆரம்பித்த ஸ்ரீதர் வேம்பு அங்கு கிராமப்புற மக்களுடன் இணைந்து செயல்பட்டார். அவர்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தந்தார்.. அதேநேரம் எளிமையாக சைக்கிளில் வலம் வந்தார். மாநிலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து, தேசிய அளவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு விரைவில் அரசியலில் சேர உள்ளதாகவும், அவர் பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் உலா வந்தன. இதனிடையே நேற்று ஒரு சமூக ஊடகத்தில் ஸ்ரீதர் வேம்பு பாஜக மாநில தலைவராக உள்ளதாக செய்தி வெளியிட்டது. ஏற்கனவே பாஜக மாநில தலைவர் தேர்வு நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஸ்ரீதர் வேம்பு 'ஜோஹோ'வின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார்.
அப்போது அப்போது வெளியிட்ட பதிவில், AI தொழில் நுட்பத்தில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட முக்கிய அப்டேட்கள் உட்பட பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாங்கள் எதிர்கொள்வதைக் கருத்தில் கொண்டும், எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டுப் பணியைத் தொடர்வதோடு, R&D முயற்சிகளிலும் முழு நேரமும் கவனம் செலுத்துவது சிறந்தது என்று நினைக்கிறேன். அதன் காரணமாக நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் டேவி குழுமத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுவார் என்று ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் பாஜகவில் ஸ்ரீதர் வேம்பு சேரப்போவதாக செய்திகள் வேகமாக பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் இன்று காலை விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில் ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், "நான் அரசியலில் சேருவது பற்றி ஒரு 'செய்தி' பரவி வருவதாகக் கேள்விப்பட்டேன். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அடுத்த வாரம் ஆஸ்டினில் (அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரம்) தொழில்துறை ஆய்வாளர்கள் குழுவிற்கு AI பற்றிய எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்திகளை வழங்க நான் இப்போது கடுமையாகத் தயாராகி வருகிறேன்.
ஆம், அதற்காக நான் அங்கு செல்ல போகிறேன். தற்போது எனக்கு ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அதனை வளர்த்தெடுக்கும் துறையில் எனக்கு இப்போது மிகவும் சவாலான புதிய பங்கு இருக்கிறது. இதை தாண்டி வேறு எதுவும் இல்லை. எனக்கு அரசியலுக்கு நேரமில்லை. அதற்கு மேல், நான் அரசியலில் சேருவது பற்றி யாருடனும் எந்த விவாதமும் நடத்தவே இல்லை. இந்த பதிவு,அதை தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன். மீண்டும் உங்கள் வேலைகளை பாருங்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications