“Yes I repeat".. ஊழல் கபடவேடதாரிகள் தான் இன்று இங்கு நம்மை ஆள்கிறார்கள்.. அழுத்திச் சொன்ன விஜய்!
சென்னை: இன்று நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய விஜய், நமது எதிரிகள் 2 பேர் எனக் கூறினார். "முகமூடி போட்ட கரப்ஷன் கபடவேடதாரிகள் தான் இப்போது நம்மை கூடவே இருந்து இப்போது இங்கு ஆண்டுகொண்டிருக்கிறார்கள். Yes I repeat.." எனக் கூறினார் விஜய்.
தவெக முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில், தவெக தலைவர் விஜய் 100 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினார். பின்னர் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. அதன்பின், கட்சியின் கொள்கைகள் செயல்திட்டம் மேடையில் அறிவிக்கப்பட்டது.

விஜய் பேச்சு: அதைத்தொடர்ந்து, தவெக விஜய் பேசுகையில், "மக்களை மதம், சாதி, மொழி, இனம், பாலினம், ஏழை பணக்காரன் என சூழ்ச்சி செய்து பிரித்து ஆளும் பிளவுவாத சித்தாந்தம் மட்டும் தான் நமக்கு எதிரியா? அப்படி என்றால் நமக்கு ஒரே ஒரு எதிரி தானா? இல்லையே! நமக்கு இன்னொரு கோட்பாடும் இருக்கே!
ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பதுதான். அடடடடா.. இந்த ஊழல் இருக்கே.. இது ஒரு வைரஸ் மாதிரி அப்படியே பரவிக் கிடக்கிறது. இதனை 100% ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் அதை ஒழித்துத்தான் ஆக வேண்டும்.
பிளவுவாத சக்திகள்: இந்த பிளவு வாத சக்திகள் கூட யார் என்று நாம் ஈஸியாக கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால் அது மதம் பிடித்த யானை மாதிரி. அது செய்யும் அராஜகத்தில் நம் கண்ணுக்கு எளிதாகத் தெரிந்துவிடும். அது தன்னைத் தானே காட்டியும் கொடுத்துவிடும்.
ஆனால் இந்த ஊழல் இருக்கிறதே.. அது எங்கு ஒளிந்திருக்கிறது, எப்படி ஒளிந்திருக்கிறது? எந்த வடிவத்தில் இருக்கிறது என கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும். கலாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும். அதற்கு முகமே இருக்காது, முகமூடி தான்.
Yes I repeat: இந்த முகமூடி போட்ட கரப்ஷன் கபடவேடதாரிகள் தான் இப்போது நம்மை கூடவே இருந்து இப்போது இங்கு ஆண்டுகொண்டிருக்கிறார்கள். Yes I repeat. நமது ஒரு எதிரி பிளவுவாத சக்திகள், இன்னொரு எதிரி கரப்ஷன் கபடவேடதாரிகள்." எனப் பேசியுள்ளார் விஜய்.
தவெக கொள்கை: தவெகவின் செயல்திட்டத்தில், "சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை. அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் நிராகரிக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை ஏற்படுத்தப்படும். சாதி, மதம், நிறம், மொழி, இனம், பாலின பாகுபாடின்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். மாநில தன்னாட்சி வேண்டும்.
மது, போதை இல்லாத தமிழ்நாட்டை படைப்போம். மாவட்டந்தோறும் காமராஜர் மாதிரி அரசு பள்ளி ஏற்படுத்தப்படும். சாதி, மதம், நிறம், மொழி, இனத்திற்குள் சமூகத்தை சுருக்க கூடாது. வர்ணாசிரம கோட்பாடு எந்த வகையில் வந்தாலும் எதிர்ப்பு. அரசு, தனியார் துறையில் அரசியல் தலையீடு கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சமூக நீதி அடிப்படையில் விகிதாச்சார பங்கீடு.
தமிழகம் முழுவதும் புதிய நீர் தேக்கங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை அவசியம். தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம். அனைவரையும் சமமாக பார்க்கும் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படும்.
தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி, தமிழே வழிபாட்டு மொழி. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் தரப்படும். லஞ்ச, லாவன்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி அளிக்கிறோம். தீண்டாமையை கடைப்பிடித்தால் கடும் தண்டனை விதிக்கப்படும்" எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications