தமிழக அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. ரூ.14.54 கோடி பறிமுதல்! வருமான வரி துறை அதிரடி
சென்னை: அரசு ஒப்பந்ததாரர், பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனையில் 14.54 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளுக்கு யார், யார் பணம் சப்ளை செய்வார்கள் என்பதை நோட்டமிட்டு அங்கெல்லாம் வருமானவரித் துறையினர் திடீர் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

எந்த ஒரு தேர்தல் காலங்களிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை பதுக்கல் பணத்துக்கு எதிராக வருமான வரித்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிகள், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் ஆலை, உள்ளிட்ட பகுதிகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து வருமான வரி சோதனைகள் நடக்கின்றன. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இந்த ரெய்டுகள் நடப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில்தான் அரசு ஒப்பந்ததாரர் பெரியசாமியின் பி.எஸ்.கே என்ற கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறை நடத்திய ரெய்டு முக்கியத்துவம் பெறுகிறது. சென்னையில் மூன்று இடங்கள், நாமக்கல்லில் 4 இடங்கள் என மொத்தம் பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 7 அலுவலகங்கள், மற்றும் பெரியசாமியின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.13.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல இவருக்கு தொடர்பு உள்ள பிற இடங்களிலிருந்து 74 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் செலவினங்களுக்காக பணப்பட்டுவாடா செய்ய இந்த பணம் பதுக்கப்பட்டதாக, கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications