விஜய் அளித்த பொறுப்பு.. டிகிரி வாங்கின போதுகூட இவ்வளவு மகிழ்ச்சியில்லை.. நெகிழும் தவெக நிர்வாகி!
சென்னை: பள்ளி, கல்லூரியில் படித்து முடித்து இரு டிகிரியை பெற்ற போது கிடைத்த சந்தோஷத்தை விடவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைகளால் கிடைத்த பொறுப்பு சான்றிதழ் அதிக மகிழ்ச்சியை அளிப்பதாக அக்கட்சியின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் தனியாக ஆலோசனை நடத்தினார். இதன்பின் மாலையில் தவெக மாவட்டச் செயலாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய், தனது முகம் பொறித்த வெள்ளி நாணயம் அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் கோவை மாவட்டச் செயலாளராக விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து விக்னேஷ் பேசுகையில், கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக தவெக விஜய் தலைவர் நியமித்துள்ளார். இந்த மகழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. தாய் - தந்தை பிறந்தநாள், திருமணம், குழந்தை பிறந்தது என்று வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்கள் இருந்திருக்கின்றன.
அதற்கு நிகரான நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. ஏனென்றால் என்னுடைய பொறுப்பை வாங்குவதற்காக ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணம் செலவிட தயாராக இருந்தனர். மாற்றுக் கட்சிகளில் இருந்து கூட வந்து பொறுப்பு கேட்ட போது, தவெக தலைவர் விஜய் எனது 30 வருட உழைப்பை மனதில் வைத்து என்னை நம்பி கொடுத்துள்ளார். இந்த பொறுப்புக்கு உண்மையாக இருந்து பணியாற்றுவேன்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று தவெக தலைவர் விஜய்-யை முதலமைச்சர் ஆக்குவோம். மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளித்த பின், மக்கள் பிரச்சனைகளுக்காக உடனடியாக சட்டத்திற்குட்பட்டு போராட வேண்டும். அதேபோல் தொழில் மற்றும் குடும்பத்தையும் பார்த்து கொள்ளுங்கள் என்று வாழ்த்தினார்.
மாவட்டச் செயலாளர் நியமன சான்றிதழை பெற்ற போது, 10, 12 ஆகிய வகுப்புக்கு பின் வாங்கிய சான்றிதழ், இரு டிகிரி முடித்த பின் பெற்ற சான்றிதழ் வாங்கிய பின் கிடைத்த சந்தோஷத்தை விடவும் இன்று தவெக தலைவர் விஜய் கைகளால் பெற்ற பொறுப்பு சான்றிதழ் அதிக சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications