''அம்மா அமர்ந்த சீட்டில் வேறு யாரையும் அமரவிடமாட்டேன்''! மாதவரம் முருகனின் 23 ஆண்டுகால டாடா சுமோ கதை
ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சுமோ கார் பற்றிய ருசிகரம்.
சென்னை: ஜெயலலிதா அமர்ந்த கார் சீட்டில் வேறு யாரையும் இதுவரை அமர வைத்ததில்லை எனக் கூறுகிறார் மாதவரம் தொகுதியை சேர்ந்த அதிமுகவின் அதிதீவிர விசுவாசி முருகன்.
ஜெயலலிதா அமர்ந்த சீட்டில் அவரது புகைப்படம் ஒன்றை வைத்து தினமும் மாலை போட்டு பூஜை செய்து வருகிறார் அதிமுக தொண்டர் முருகன்.
இந்தக் காலத்திலும் இப்படியொரு விசுவாசியா என வியக்க வைக்கிறார் அதிமுக தொண்டர் முருகன்.

டாடோ சுமோ
கடந்த 2000 ஆம் ஆண்டு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளால் நிதி வசூலிக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு TN 07 V 1948 என்ற பதிவெண் கொண்ட டாடா சுமோ கார் பரிசாக வாங்கிக் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா பிறந்த ஆண்டான 1948ஐ பதிவெண்ணாகவும் விக்டரி என்ற வார்த்தையை குறிக்கும் வகையில் V என்ற எழுத்தும் அந்த டாடா சுமோவின் நம்பர் பிளேட்டில் இடம்பிடித்தது. சில மாதங்கள் இந்தக் காரை பயன்படுத்திய ஜெயலலிதா அடுத்தடுத்து டாடா சியரா, டாடா சஃபாரி, என அப்போது வெளிவந்த புது புது கார்களுக்கு மாறிவிட்டார்.

கார் உரிமையாளர் பெயர்
இதனிடையே இந்த டாடோ சுமோ அதிமுக பொருளாளராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் வசம் ஜெயலலிதா ஒப்படைத்தார். ஆனால் அவரால் இந்தக் காரை பயன்படுத்த முடியவில்லை. அவரது பொருளாளர் பதவியை ஜெயலலிதா பறித்ததால் இந்தக் கார் அப்படியே பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதியை சேர்ந்த பாடியநல்லூர் முருகன் என்பவர் ஜெயலலிதா மீது கொண்டிருந்த அளவு கடந்த மரியாதையால் அவர் பயன்படுத்திய டாடா சுமோ காரை முறைப்படி வாங்கி தனது பெயருக்கு காரை மாற்றிக்கொண்டார்.

பழுது நீக்கி
நீண்ட நாட்களாக பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பல லட்சங்கள் செலவு செய்து டாடா சுமோவை ரெடி செய்திருக்கிறார் முருகன். ஜப்பான் ஏசி, இஞ்சின் என சகலவிதமான பாகங்களையும் சீரமைத்த முருகன், உள்ளே இருக்கும் இருக்கைகளில் மட்டும் கைவைக்கவில்லை. குறிப்பாக ஜெயலலிதா அமர்ந்த முன் இருக்கையில் வெள்ளைத் துண்டை விரித்து அதில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மாலையிட்டு காரின் முன் பக்க கண்ணாடியில் தங்கத் தாரகையின் தங்கரதம் என ஸ்டிக்கர் ஒட்டி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.

அம்மா அமர்ந்த சீட்
இதனிடையே இது குறித்து கூறும் முருகன், ''அம்மா அமர்ந்த சீட்டில் என் குழந்தைகளை கூட இதுவரை அமரவிட்டதில்லை. 8 ஆண்டுகளாக இந்த டாடா சுமோவை வைத்திருக்கிறேன், நல்ல கன்டிஷனாக உள்ளது. சிறிய வேலை வந்தாலும் உடனடியாக சரிசெய்துவிடுவேன். எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அந்தளவுக்கு வண்டி பக்காவாக உள்ளது. அம்மா படத்தை தவிர முன் சீட்டில் யாருக்கும் இடம் கிடையாது. எனது காரை தினமும் 4,000 பேராவது வியப்புடன் பார்ப்பார்கள். நான் எங்கே சென்றாலும் இந்த சுமோவில் தான் செல்வேன்.'' என்கிறார் முருகன்.












Click it and Unblock the Notifications