துணை முதல்வர் பதவி: விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்.. உதயநிதி ஸ்டாலின்
சென்னை: அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது பதவி கிடையாது.. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு. நிறைய விமர்சனங்கள் வருகிறது.. அந்த விமர்சனங்களையும் நான் உள்வாங்கிக் கொள்கிறேன். விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எனது பணிகள், செயல்பாடுகள் இருக்கும் என்று கூறினார்.
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் பரவி வந்தது. முதல்வர் ஸ்டாலினும் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது என்று கூறியிருந்தார். இதனால் தமிழக அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தற்போது அமைச்சர்களாக இருக்கும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார்.
இன்று துணை முதல்வராக பதவியேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துணை முதல்வர் பொறுப்பு கொடுத்த முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்காக இன்னும் அதிகமாக உழைக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். இது பதவி கிடையாது.. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு. நேற்று இரவில் இருந்தே நிறைய பேர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நிறைய விமர்சனங்கள் வருகிறது.. அந்த விமர்சனங்களையும் நான் உள்வாங்கிக் கொள்கிறேன். விமர்சிப்பவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் எனது பணிகள், செயல்பாடுகள் இருக்கும். ஏற்கனவே அமைச்சராகி இரண்டு வருடம் செயல்பட்டு வருகிறேன். இது கூடுதல் பணிதான்..
இருந்தாலும் முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் வழிகாட்டுதலின் படியும் ஒத்துழைப்போடும் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. விமர்சனங்களை வரவேற்கிறேன். எனது செயல்பாடுகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்றார். பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணியை சந்தித்து அவரிடம் உதயநிதி வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்வீட் பதிவை போட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை கழகத்தலைவர் - மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தோம். அண்ணா - கலைஞர் காட்டிய வழியில், நம் முதலமைச்சர் அவர்களின் கரம்பற்றி அயராது உழைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications