புதுசா கல்யாணம் ஆனவங்க.. இதெல்லாம் மறந்தும் செஞ்சுடாதீங்க.. வாழ்க்கையே தலைகீழாக மாறிடும்!
சென்னை: புதிதாக திருமணம் ஆனவர்கள், சென்னை போன்ற பெருநகரங்களில் குடும்பமாக குடியேறுகிறார்கள் என்றால் அவர்கள் பணத்தை சேமிக்க என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம். சின்ன சின்ன விஷயங்களை தியாகம் செய்தால், சில விஷயங்களில் ஸ்மார்ட்டாக யோசித்தால், பெரிய அளவில் சேமிக்க முடியும்.
குறிப்பு: பொருளாதார சேமிப்பு குறித்த இந்த கட்டுரை, பலரது அனுபவத்தை கேட்டு அதன் அடிப்படையில் எழுதப்படுகிறது. பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல.. எனவே உங்களுக்கு பிடித்தபடி செயல்படுங்கள்.

சரிவிஷயத்திற்கு வருவோம். புதிதாக திருமணம் ஆகும் நபர்கள், பணத்தை சேமிக்கும் விஷயத்தில் செய்யக்கூடாத தவறுகளை முதலில் பார்ப்போம். நீங்கள் சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெரிய நகரங்களில் புதிதாக வீடு எடுத்து குடும்பமாக குடியேற வருகிறீர்கள் என்றால், வீடு எப்படி என்பதை முடிவு செய்யுங்கள்.
சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் வாடகைக்கு வீடு பார்க்கும் போது கவனமாக பாருங்கள். அதிக வாடகைக்கு அதிக வசதிகளுடன் இரண்டு படுக்கை வசதி வீடுகளை பார்க்கிறார்கள். கண்டிப்பாக 2 bhk வேண்டுமா அல்லது 1 bhk வீடு போதுமா என்பதை தெளிவாக முடிவு செய்யுங்கள். பலரும் இரண்டு பேர் இருக்க போகும் வீட்டிற்கு 2 bhk வீட்டை வாடகைக்கு எடுக்கிறார்கள். அப்படி எடுத்தால் சென்னை போன்ற நகரத்தில் 15 ஆயிரத்திற்கு மேல் 30 ஆயிரம் வரை சர்வ சாதாரணமாக வரும். இதே 1 bhk என்றால் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இடத்தை பொறுத்து வரும்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒரு வாடகையும், சென்னைக்கு வாடகை வேறுமாதிரியும் இருக்கும். எனவே உங்களுக்கு போய் வரும் நேரத்தை பொறுத்து வாடகை வீட்டை முடிவு செய்யுங்கள். 1 bhk வீடு எடுத்தால் நீங்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சேமிக்க முடியும். அதேநேரம் நீங்கள் லீசுக்கு வீடு எடுத்தால் இன்னும் கூடுதலாக சேமிக்கலாம். மாதம் 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சேமிக்க முடியும். ஆனால் லீசு அல்லது வாடகை எப்படி வீடு என்றாலும், தயவு செய்து வீட்டை முழுமையாக பாருங்கள். தண்ணீர் பிரச்சனை முதல் டைஸ் பிரச்சனை வரை எல்லாம் ஓனர்கள் ஏற்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் அவர் தானா, வீடு தண்ணீரில் மூழ்கும்வாய்ப்பு உள்ளதா,மோட்டார் போடுவதற்கு கட்டுப்பாடு உள்ளதா, சரியாக வீட்டை பராமரிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதேபோல் வீட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சரி செய்வது யார், ஓனர் செய்வாரா அல்லது ஏமாற்றுவாரா என்பதை பாருங்கள். எல்லாம் சரி என்றால், வீட்டின் உரிமையாளர் பணத்தை திரும்ப தருவாரா அல்லது இழுத்தடிப்பாரா என்பதை உறுதி செய்யுங்கள். இதற்கு நீங்கள் அவரிடம் ஒப்பந்தம் போடும் போதே பேசிக்கொள்ளுங்கள். ஓப்பந்தத்தை பத்திர அலுவலகத்தில் அல்லது வாடகை ஒப்பந்த இணையதளத்தில் பதிவு செய்ய அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் உங்கள் லீஸ் அல்லது வாடகை அட்வான்ஸ் பாதுகாப்பாக இருக்கும். எல்லாம் சரி என்றால் வாடகை அல்லது லீசுக்கு போகலாம்.
இரண்டாவது முக்கியமான விஷயம், வீட்டை அடிக்கடி மாற்றக்கூடாது, முடிந்தவரை ஒரே வீட்டில் இருந்தால் உங்களுக்கு அதிக பணம் செலவு ஏற்படாது. வருடம் வருடம் வீடு மாறினால் நிறைய பணத்தை பெயிண்டிங் மற்றும் போக்குவரத்திற்காக இழக்க வேண்டியதிருக்கும். எனவே ஒரே வீட்டில் இருக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போல் வீடு பாருங்கள்.
வீட்டிற்கு அடுத்தபடியாக அதிக செலவு வெளியில் செல்வதாலும், ஓட்டல்களில சாப்பிடுவதால் ஏற்படும். வாரம் ஒரு முறை மட்டும் வெளியில் சென்றால் செலவு குறைவாக இருக்கும். வாரத்தில் அதிக நாட்கள் வெளியே சென்றால் நிச்சயம் உங்கள் பர்சை பதம் பார்த்துவிடும். வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வெளியே சென்று என்ஜாய் செய்தால், உங்களுக்கு பெரிய அளவில் பணம் மிச்சமாகும். இந்த வகையில் மாதம் 4 ஆயிரம் ரூபாயை சர்வசாதாரணமாக சேமிக்கலாம்.
அதேபோல் கண்டிபடி அதிக பணம் செலவு ஆகும் மொபைல் போன்களை இஎம்ஐஇல் வாங்க கூடாது. கார்கள் என்பது கடன் வாங்காமல் வாங்க முடியும் என்றால் வாங்கலாம். மாறாக இஎம்ஐ இல் போட்டு வாங்குவது ஆபத்தில் முடியும். எல்லா பொருட்களையும்இம்ஐஇல் தான் வாங்க வேண்டும் என்றால், கவனமாக இருக்க வேண்டும். கிரடிட் கார்டு வலையில் விழக்கூடாது. பர்சனல் லோன் வாங்குவதும் சிக்கலை ஏற்படுத்தலாம். முடிந்தவரை கடன் வாங்காமல், கிரிடிட் கார்டு பயன்படுத்தாமல், இஎம்ஐ ஐ வலையில் சிக்காமல் வாழ வேண்டும்.
அத்துடன் பணத்தில் ஒரு பாதியை பல்வேறு சேமிப்பில் போட்டு வரலாம். இப்படி செய்தால் வாழ்வில் ஒரு காலக்கட்டத்தில் உங்களிடம் ஏராளமான பணம் இருக்கும். மாறாக இஎம்ஐஇல் விழுந்தால் மீள முடியாமல் துயரத்தில் தவிக்க வேண்டியது வரலாம் என்பது அனுபவஸ்தர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications