இஎம்ஐ கட்டலை! என் போனை ஹேக் செய்து! ஐயோ அசிங்கப்படுத்துறாங்க! ஐடிஎஃப்சி வங்கி வாசலில் பெண் கதறல்
சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள ஐடிஎஃப்சி வங்கியில் தான் வாங்கிய கடனுக்காக தனது தொலைபேசியை ஹேக் செய்து அதில் உள்ள கான்ட்டாக்ட்களுக்கு போன் செய்து அசிங்கப்படுத்துவதாக பெண் ஒருவர் வங்கி வாசலில் இருந்து கதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: என் பெயர் அனிதா. நான் ஈவன்ட் ஆர்கனைஸராக இருந்தேன். கடந்த ஓராண்டாக எனக்கு கால் உடைந்து லிகமென்ட் கிழிந்து விட்டது. என்னால் தனியாக நடக்க முடியாது. கழிப்பறை சென்றாலும் நான் வாக்கர் வைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.

நான் சென்னை அண்ணாநகரில் உள்ள ஐசிஎஃப்சி வங்கியில் 6.90 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். என் கால் உடைந்து நான் படுத்தபடுக்கையாக இருந்ததால் என்னால் நான் வாங்கிய கடனுக்காக தவணையை கட்ட முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் போன் செய்து என்னிடம் இஎம்ஐ கேட்டால், "அடுத்த மாதம் எப்படியாவது முயற்சி செய்து கட்டி விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே வந்தேன்.
ஆனால் கடைசி 6 மாதங்களில் கூகுள் கான்டாக்ட்டில் உள்ள என் உறவினர்கள், என் கிளைண்டுகள் உள்ளிட்டோரின் மொபைல் எண்களை எடுத்து அனைவருக்கும் போன் செய்து, "நான் கடன் வாங்கி தவணையை கட்டவில்லை. எங்களிடம் ரூ 20 லட்சம், 25 லட்சம் பெற்றுவிட்டு ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார்கள் " என பேசிவிட்டார்கள்.
ஆனால் நான் கொடுக்க வேண்டியது வெறும் ரூ 2.70 லட்சம்தான். செலிபிரிட்டிகளுக்கு மேக்கப் செய்யும் ஒரு கலைஞருக்கு போன் செய்து "அனிதா ரூ 25 லட்சம் தர வேண்டும். அதை உங்களிடம் வாங்கிக் கொள்ள சொன்னார்" என வங்கி தரப்பு பொய் கூறியுள்ளது. இதையடுத்து அவர் உடனே எனக்கு போன் செய்து விஷயத்தை கேட்டார் . "நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை" என சொன்னேன்.
நான் யாருடைய போன் நம்பரையும் கொடுக்கவில்லை. என்னுடைய போனை ஹேக் செய்து கூகுள் கான்டாக்ட்டில் இருந்து கான்டாக்ட்களை எடுத்துவிட்டனர். நான் குடியிருக்கும் தெருவில் ஒவ்வொரு வீடாக கதவை தட்டி என் புகைப்படத்தை காட்டி ரூ 25 லட்சத்தை இந்த பெண் ஏமாற்றிவிட்டு இங்க குடியிருக்கிறார் என கூறியுள்ளனர்.
எனக்கு தெரிந்தவர் வீட்டுக்கு போய் "நான் அவரிடம் பணம் வாங்கிக்க சொன்னதாக" சொல்லி பிரச்சினை செய்ததால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் பிரச்சினை வந்துவிட்டது. நான் தங்கியிருக்கும் வீட்டின் ஓனரிடம் போய், "அனிதாவை உங்கள் வீட்டுக்குள் சேர்க்கக் கூடாது. மீறி சேர்த்தால் நோட்டீஸ் ஒட்டிவிடுவோம்" என மிரட்டியுள்ளனர். இதனால் வீட்டை காலி செய்யுமாறு ஓனர் வற்புறுத்துகிறார். 2 நாட்களாக மின் இணைப்பையும் ஓனர் துண்டித்துவிட்டார்.
நான் போன் செய்து அவர்களை கேட்டால் "நாங்கள் அப்படித்தான் கேட்போம். இப்ப என்ன உங்களுக்கு சாரி சொல்லணுமா" என கேட்கிறார்கள். நான் வாங்கிய கடனுக்கு மாதம் இஎம்ஐ 18,980 ரூபாய். நான் வாங்கிய பணத்தில் ரூ 3 லட்சத்திற்கு மேல் கட்டிவிட்டேன். இந்த பணத்தை இரு ஆண்டுகளாக கட்டியுள்ளேன். இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது.
கூகுள் கான்டாக்ட்டில் இருந்து போன் எண்களை எடுக்குமாறு எந்த ஆர்பிஐ விதிகளில் இருக்கிறது. நான் வாங்கிய கடனுக்கு எல்லோரிடமும் கேட்பதா, நான் வாங்கியதற்கு நான்தானே கட்ட வேண்டும். எனது காரை பறிமுதல் செய்ய 15 குண்டர்களை அனுப்பியுள்ளார்கள். நான் குடியிருக்கும் பகுதிக்கு வந்து யாரிடம் எல்லாம் நான் ரூ 25 லட்சம் வாங்கினேன் என சொல்லி என்னை அசிங்கப்படுத்தினார்களோ, அவர்களிடம் எல்லாம் வந்து ரூ 2.70 லட்சம்தான் தர வேண்டும் என வங்கித் தரப்பு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நான் போலீஸில் புகார் கொடுப்பேன். இவ்வாறு அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications