மா.சு. ஏன் அப்படி சொன்னார்? ஷவர்மா மட்டுமில்லை.. இட்லி, டீ கூட வெளிநாட்டு உணவுதான்.. எதை சாப்பிடுவது?
சென்னை: ஷவர்மா இந்திய உணவு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் பல உணவு பொருட்கள் எந்தெந்த நாடுகளில் இருந்து வந்தவை என நெட்டிசன்கள் லிஸ்ட் போட்டு வருகின்றனர்.
Recommended Video
கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஷவர்மா கடைகளில் நடந்துவரும் ரெய்டு தொடர்பாக பேசினார்.
அப்போது, "ஷவர்மா இந்திய உணவு இல்லை. மேற்கத்திய உணவு. மேலைநாடுகளில் மைனஸ் டிகிரி குளிரில் அது கெட்டுப்போகாது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இறைச்சியை ஃப்ரீசரில் வைத்து சரியாக பராமரிக்காவிட்டால் கெட்டுப்போய்விடும்." என்றார்.

ஷவர்மா வெறியர்கள்
அமைச்சரின் இந்த கருத்து தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவிலும் டிரெண்டானது. அதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முறையாக தயாரிக்காத உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்கலாமே தவிர எந்த உணவையும் தடை செய்யக்கூடாது என்று பலர் கூறினர். மத்திய கிழக்கு நாடுகளில் உருவான ஷவர்மா தமிழ்நாட்டுக்கு வந்த ஏறத்தாழ 10 ஆண்டுகளே ஆனாலும் மக்கள் அதன் ருசியில் மயங்கி பிரியர்களாகவே ஆகிவிட்டனர். சிலர் ஷவர்மா வெறியர்களாக இருக்கின்றனர்.

உணவின் பூர்வீகம்
அத்தகையோர் அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுப்பதற்காக தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள், அன்றாடம் அனைவரும் உட்கொள்ளும் உணவுகளின் வரலாற்றை தேடத் தொடங்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில், ஒரு நபர் எந்தெந்த உணவு எந்தெந்த நாடுகளில் இருந்து இங்கு வந்தது என்பதை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

சமோசா முதல் தேநீர் வரை
அதில், "சமோசா பெர்ஷியாவிலிருந்து வந்தது என்றும் காபி எத்தியோப்பியா மற்றும் ஏமன் நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு பரவியது என்றும் அல்வா துருக்கியின் உணவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிலேபி பெர்ஷிய உணவு என்றும், தேநீர் சீனாவிலிருந்து வந்த பானம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தக்காளியும் உருளை கிழங்கும் பெருவிலிருந்து வந்ததாக தெரிவித்துள்ள அவர், உணவு பாதுகாப்பு குறித்து கவனம் இருக்க வேண்டுமே தவிர உணவு எங்கிருந்து வந்தது என்பதில் இருக்கக்கூடாது என அந்த நபர் அறிவுறுத்தியுள்ளார்.

இட்லி இந்திய உணவா?
இதை வைத்து பார்க்கையில், நம்மில் பலர் அன்றாடம் காலை, இரவு வேலைகளில் சாப்பிடும் இட்லி உண்மையில் தமிழ்நாட்டு உணவுதானா என்பது குறித்து தேடியபோதுதான் ஆச்சரியமான தகவல் கிடைத்தது. ஆம், இட்லியும் ஷவர்மாவை போலவே வெளிநாட்டிலிருந்து வந்த உணவுதான் என்று. இட்லியின் பூர்வீகம் இந்தோனேஷியா. பண்டைய காலத்திலேயே தென்னிந்திய மக்களுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையே கடல் வழி வர்த்தக தொடர்பு இருந்ததால் அங்கு சென்றவர்கள் இட்லியை நமது நாட்டுக்கும் அறிமுகம் செய்துள்ளனர்.

சங்க இலக்கியங்கள்
ஆனால், இந்தோனேஷியாவில் தயிறில் உளுந்தை ஊறவைத்து அரைத்து வேகவைத்து தயாரித்து இருக்கின்றனர். அதுதான் இங்கு இட்லியாக ஆவி பறக்க வந்திருக்கிறது. சங்க இலக்கியங்களிலும் இட்லி பற்றிய குறிப்புகள் இல்லை. கி.பி.920-ல் வட்டாராதனே' என்ற கன்னட இலக்கியத்தில்தான் இட்டலீஜ் என்ற பெயரில் முதன்முதலில் இட்லி பதிவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த இட்லி 700 ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகிறது. பிரபல உணவு வரலாற்று ஆய்வாளரான கே.டி.ஆச்சார்யாவும் இட்லி இந்திய உணவு இல்லை என்றும் இந்தோனேஷியாவிலிருந்து வந்ததுதான் என்றும் உறுதிபடுத்துகிறார். எனவே அந்த நாட்டு உணவு, இந்த நாட்டு உணவு என்று வேறுபடுத்தி ஒதுக்காமல், அதன் நன்மைகளை பார்த்து மகிழ்வோடு சாப்பிடுவோம். நலமோடு வாழ்வோம்.












Click it and Unblock the Notifications