என்னை பாஜக சுட்டுக் கொல்லும்...2024 தேர்தலில் வெற்றி பெற்றால் இதுதான் கதி- திருமாவளவன் பகீர் பேச்சு
சென்னை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நான் சுட்டுக் கொல்லப்படலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நிருபர்கள் சங்கத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகும் வழக்கின் தீர்ப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பேசியதாவது: இன்று நமக்கு தலை நிமிர்வையும் தன்மானத்தையும் எது பெற்றுத் தந்தது என்றால் சமூக நீதி என்ற கோட்பாடுதான் பெற்றுத் தந்தது. ஜனநாயகம் என்ற கோட்பாடு தந்தது.

ஆர்.எஸ்.எஸ்.
சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றை ஒரு கோட்பாடாக தந்திருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அப்படியானால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் உண்மையான எதிரியார்? என்பதை இப்போது சொல்லுங்கள். காங்கிரஸா? கிடையாது. கம்யூனிஸ்டுகளா? கிடையாது. தத்துவார்த்த ரீதியாக முரண்பாடுகள் உண்டு. அவ்வளவுதான். திமுகவா? கிடையாது.

ஒரே எதிரி அரசியல் சட்டம்
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முழுமையான எதிரி, உண்மையான எதிரி, முதன்மையான எதிரி, ஒரே எதிரி, ஒற்றை எதிரி, இந்திய அரசமைப்புச் சட்டம்தான். அதை தூக்கி எறியவேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். இந்து ராஷ்டிரம் என இந்த நாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் சூட்டுவதற்கு தடையாக இருப்பது அரசியல் சாசனம்தான். அரசாங்கத்தின் மதம் என ஒன்றை தடையாக இருப்பது அரசியல் சட்டம்.
சமூக நீதியை தந்து பெண்களை மேம்பாடு அடைய செய்வது, தலித்துகளை மேம்பாடு அடைய செய்வது, விளிம்புநிலை மக்களை அதிகார வரம்புள்ளவர்களாக வளர்த்தெடுப்பது என்பது எல்லாம் அரசியல் சட்டம்தான். அதுதான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கும் சிக்கலாக இருக்கிறது.

அடுத்தடுத்து படுகொலைகள்
ஆகையால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை நோக்கி இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் அரசியல் சட்டத்தை மீறுகிறீர்களா? என கேள்வி எழுப்புகின்றனர். அதனால்தான் கவுரி லங்கேஷை வீடு தேடிப் போய் படுகொலை செய்தனர். அவர் எந்த கட்சியும் கிடையாது. பேராசிரியர் கல்புர்கியை வீடு தேடிப் போய் கொல்கிறார்கள். தபேல்கரை கொல்கிறார்கள். இவர்கள் என்ன அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களா?

என்னை சுட்டுக் கொல்வார்கள்
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் சாசனம் ஒரு இரவில் செல்லாது என அறிவிக்கப்பட்டுவிடும். மனுஸ்மிருதிதான் இந்த நாட்டின் சட்டம் என்பார்கள். அப்போது யார் யார் எந்தெந்த சிறைகளில் இருப்பார்களோ தெரியாது . இந்த திருமாவளாவன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.












Click it and Unblock the Notifications