அஸ்திவாரமே "கிறிஸ்தவர்கள்".. அப்பாவு இப்படி பேசலாமா.. சூறையாடுகிறார்களே.. இந்து மக்கள் கட்சி ஆவேசம்
கிறிஸ்தவர்களை உயர்த்தி அப்பாவு பேசியதற்கு, அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: இந்துக்கள் நடத்தும் ஸ்கூலில் ஒரு தவறு நடந்துவிட்டால், உடனே அந்த பள்ளிகளை சூறையாடுகிறார்களே, ஆனால், இதுவே, கிறிஸ்தவர்கள் நடத்தும் ஸ்கூல்களில் தவறு நடந்தால் அதை யாராவது கண்டு கொள்கிறார்களா? சபாநாயகர் அப்பாவு அப்படி பேசலாமா? என்று அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராஜபாளையத்தில், சென்னை மாகாண முன்னாள் முதல்வர் குமாரசாமி ராஜா அவர்களின் திருவுருவச் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.. வாக்குறுதிகளை நிறைவேற்றாதது முதல், கடலுக்கு நடுவில் கருணாநிதிக்கு பேனா சிலை தேவையா? என்பது முதல் பலவற்றை விமர்சித்தார்.
அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி! திமுக அரசின் திட்டத்துக்கு பாமக முதல் ஆளாக வரவேற்பு!
பொய்யாமொழி
தொடர்ந்து அர்ஜூன் சம்பத் பேசும்போது, "இப்போது பள்ளிகளில் மாணவிகள் தற்கொலை விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது... பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படவில்லை.. அதுக்கு பதிலாக உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராக செயல்படுகிறார்... ஆசிரியர்களை மிரட்டும் நோக்கத்துடன் செயல்படுகிறார்.. இதை முதலில் அமைச்சர் கைவிட வேண்டும்.
கிறிஸ்தவர்கள்
ஒரு இந்துக்கள் நடத்தும் பள்ளியில் பிரச்சினை ஏற்பட்டால், உடனே அந்த பள்ளிக் கூடங்கள் சூறையாடப்படுகின்றன.. ஆனால், இதே கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் பிரச்சனை ஏற்பட்டால் அது கண்டுகொள்ளப்படுவதில்லை.. இதோ இப்போதுகூட, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடத்துகிற கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்... இதற்கு அமைச்சர் பொறுப்பு ஏற்பாரா? சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தின் அஸ்திவாரமே கிறிஸ்தவர்கள்தான் என்றும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் தமிழர்களின் வளர்ச்சிக்கு காரணம் என்று சொல்லலாமா?
அப்பாவு
சபாநாயகர் அனைத்து மதத்தினருக்கும் சமமானவராகத்தானே இருக்க வேண்டும்? இவர் கிறித்தவ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாற்று மதத்தினரை இழிவாக பேசுகிறார்... சபாநாயகர் எப்போது ஒரு பொதுவான நபராக இருக்க வேண்டும். மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என்று பேசலாமா? இதற்கு சபாநாயகர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கருப்பு கொடி காட்டுவோம்.. தமிழக முதல்வர் ஸ்டாலினும் தொடர்ந்து இந்து பண்டிகைகளை புறக்கணித்து வருகிறார்.. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். இதனால்தான் அவரை அரசை இந்து விரோத அரசு என்று நாங்கள் சொல்கிறோம்..
தலையில் தட்டுகிறார்
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் தட்டுகிறார்.. இது அவரது வேற்றுமை மனப்பான்மையை காட்டுகிறது... இப்போதெல்லாம் பள்ளி மாணவிகள் விவகாரம் மதரீதியாக அழைக்கப்படுகிறது.. அதேபோல, தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்துவிடுகிறார்கள்.. எங்களது கருத்துரிமை பேச்சுரிமைகளை பறிக்கக்கூடாது" என்றார்.