2 .. கட்டுமான தொழிலாளர்களுக்காக.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
சென்னை : கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் உயிரிழந்தால், உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை தமிழக அரசே ஏற்கும் என தொழிலாளர் ஆணையம் அறிவித்துள்ளது.
தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "கட்டுமான தொழிலாளர்கள் (வெளிமாநில தொழிலாளர்கள் உள்பட) பணியிடத்தில் விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது உடலை அந்த தொழிலாளியின் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல நிதியுதவி அளிக்கப்படும் என 2023-2024-ம் நிதியாண்டிற்கான மானிய கோரிக்கையின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையால் 21.07.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, தமிழ்நாட்டில் வாழும் கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை உடல் கூராய்வுக்கு பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து அரசு அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்காக ஏற்படும் செலவினம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் வழியாக வழங்கப்படும்.
மேலும், புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை, உடல் கூராய்வுக்கு பின்னர், அரசு அமரர் ஊர்தி மற்றும் ரெயில் மூலம் எடுத்துச்செல்ல ஆகும் தொகையும், விமானம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வது எனில் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் வழியாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தால் வழங்கப்படும்." இவ்வாறு அந்த அறிவிப்பின் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பு 2 : தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து தமிழ்நாடு கட்டுமான கழகம் நடத்தவுள்ளது. இதில் 3 மாத கால திறன் பயிற்சியை பெற கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்து இருக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய்பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஒரு வார கால பயிற்சியை பெற கட்டுமான தொழிலாளா்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். 3 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும்.
கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய்பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும். மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
2 பயிற்சியும் தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இப்பயிற்சிகள் வருகிற 15-8-2023 முதல் தொடங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications