டிரம்ப்பால் எகிறப்போகும் தங்கம் விலை.. காரணம் இதுதான்! அதிரவைத்த தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்
சென்னை: அமெரிக்க அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் தங்கத்தின் விலை என்பது இன்னும் அதிகரிக்கும் என்று அதற்கான காரணத்தை கூறி தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி அதிர வைத்துள்ளார்.
தங்கத்தின் விலை என்பது நம் நாட்டில் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை மளமளவென சரிந்தது.

வரி குறைப்புக்கு முன்பு வரை ஒரு புவன் ரூ.55 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையான நிலையில் அதன்பிறகு ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. இதனால் மக்கள் மகிழ்ந்தனர். ஆனாலும் இந்த மகிழ்ச்சி என்பது தற்காலிகமானதாக தான் உள்ளது.
ஏனென்றால் அதன்பிறகு மீண்டும் தங்கம் விலை என்பது கிடுகிடுவென உயர தொடங்கியது. தங்கத்தின் விலை என்பது பல்வேறு காரணிகளை சேர்ந்து உள்ளது. தற்போது இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்கள் என்பது தங்கத்தின் விலையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தற்போது கடந்த அக்டோபர் 16ல் ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்த நிலையில் தீபாவளி தினமான நேற்று ஒரு கிராம் ரூ.7,455க்கு விற்பனையானது.
ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரு பவுன் தங்கம் என்பது ரூ.60,000யை நெருங்க உள்ளது. இதற்கிடையே தான் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் மீண்டும் தங்கம் விலை உயரும் என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கி பயணம் செய்தால் மீண்டும் ஒரு கரெக்ஷன் இருக்கும். அந்த கரெக்ஷன் தான் இது. இது இன்று மற்றும் நாளை வரை இருக்கும். அதன்பிறகு இங்கிருந்து விலை மேல்நோக்கி இருக்கும். சர்வதேச அளவில் தற்போது இருக்கும் பிரச்சனையிலும் எந்தவித மாற்றம் இல்லை. எந்தவித மாற்றம் இன்றியும் தற்போது விலை குறைந்துள்ளது. இன்னும் ஒன்றை கூற வேண்டும் என்றால் தங்கத்தின் விலை என்பது தற்போது இருப்பதை விட கூடுதலாக தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த விலை இன்னும் வரவில்லை.
இதற்கு முக்கிய காரணம் என்றால் வரும் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து விலையேற்றத்தில் பெரிய மாற்றம் என்பது நிகழ வாய்ப்புள்ளது. தற்போதைய அரசியல் நிலவரம், கருத்து கணிப்புகளின்படி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் வெல்வார் என்று தகவல் வந்துள்ளது. ஒருவேளை டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும்.
இதற்கு காரணம் என்றால் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக கருத்து சொல்பவர். அதேபோல் இஸ்ரேலுக்கு பெருமளவு ஆதரவு கொடுக்கும் தன்மையுடன் உள்ளார். இது நடந்தால் இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இன்னும் தீவிரமாகும். இந்த சூழல்கள் வந்தால் இன்னும் கூட தங்கம் விலை என்பது ஏறும்'' என்றார்.












Click it and Unblock the Notifications