கார் அல்ல.. பிளேனே வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது.. மாஜி "இன்னோவா கார் ஓனர்" நாஞ்சில் சம்பத்!
சென்னை: இன்னோவா கார் அல்ல, ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிக்கான வேலைகள் களைகட்டியுள்ளன. திமுக, பாஜக, அதிமுக ஆகியவை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இழுப்பதில் தீவிரமாக வேலை செய்து வருகின்றன,
மத்தியில் ஆளும் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழும் என்றும் பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும் பாஜக மாநில தலைவர் எல் முருகன் கூறியிருந்தார்.
கின்னஸ் சாதனை படைத்த தமிழக காங்கிரஸ்... உலகிலேயே எந்தக் கட்சியும் செய்யாத ஒரு காரியம்..!
நாஞ்சில் சம்பத்
இந்நிலையில் இன்னோவா கார் பரிசாக அளிக்கப்படும் என்று பாஜக தலைவர் அறிவித்த பின்னர் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஆனது. பலரும் சமூக வலைதளங்களில் நாஞ்சில் சம்பத்தையும் இன்னோவா காரையும் குறிப்பிட்டு விமர்சிக்க தொடங்கினர். ஏனெனில் நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவிடம் இன்னோவா கார் பரிசாக பெற்றிருந்தார்.
பாஜகவின் அரசியல்
இந்நிலையில் விமர்சனங்களுக்கு நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக தமிழகத்தில் தரங்கெட்ட அரசியலை முன்னெடுக்க போவதாக குற்றம்சாட்டினார். எந்த விலைய கொடுத்தாவது வெற்றி பெற பாஜக நினைக்கிறது என்றும் கூறினார்.
சம்பத் தாக்கு
வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கே கார் பரிசு என்றால் , இன்னும் எந்த பாவத்தை எல்லாம் செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் நாஞ்சில் சம்பத் பாஜகவை கடுமையாக பேசினார்.
ஏரோப்ளேனே கொடுத்தாலும்
மேலும் அவர் கூறும் போது, பாஜகவினருக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன், இன்னோவா கார் இல்லை. ஏரோப்ளேனே வாங்கி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே முடியாது. அவர்கள் பிழைக்கவும் முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.