வாரிசுகள் திறமைசாலியாக இருந்தால்.. ஸ்டாலின் கூறிய அந்த வார்த்தை! கவனிச்சீங்களா.. திரும்பும் பாஜக
சென்னை: திமுக வாரிசு அரசியல் செய்வதாக பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் தான்‛‛வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம்'' என முதல்வர் ஸ்டாலின் பரபரப்பாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் திமுக வாரிசு அரசியலை பின்பற்றி வருகிறது என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பல பாஜக தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக திமுகவினரும், பாஜக சார்பில் அரசியலில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை பட்டியலிட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் இன்று டிவிஎஸ் குழுமத்தின் டிஎஸ் சீனிவாசன் நூற்றாண்டு விழா நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்று இருசக்கர வாகனங்கள் எது வந்தாலும், ஏழை எளிய மக்களின் வாகனமாக திகழ்ந்தது டிவிஎஸ் தான்.
வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். வாரிசு என்தும், ஏதோ அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம். டிவிஎஸ் போன்று பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு தேவை. தமிழக தொழில்துறையில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
'நம்ம ஊர் பள்ளி' என்கிற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். சமூக சேவை எண்ணம் கொண்டவர்களுடைய முயற்சியையும் இணைத்துக் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலமாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். திட்டத்தை நான் தொடங்கிய முதல் நாளே ஐம்பது கோடி ரூபாய் மதிப்பிலும், இப்போது 158 கோடி ரூபாய் மதிப்பிலும் கொடைகள் வந்திருக்கிறது.

இன்றைக்கு தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக, தொழில் துறையில் அதிவேக முன்னேற்றம் அடைந்து வருகிறது. புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக இருப்பதுதான் தொழில் நிறுவனங்கள் வருவதற்கு முக்கிய காரணமாகும். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏறத்தாழ 10 விழுக்காடு அளவுக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பு இருக்கிறது.
2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை எங்கும் இப்படி நடந்தது இல்லை என புகழும் அளவுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளோம். தொழில் துறையை பொறுத்தவரை, அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications