"இங்கே வாங்க".. ரஜினியை அழைத்த சரத்.. பாஜகவுக்கா? அதிமுகவுக்கா? 3வது அணிக்கா? பரபரக்கும் களம்
ரஜினிகாந்த்துக்கு சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்
சென்னை: "ரஜினியைவிட நான்தான் சீனியர்.. 14 வருஷத்துக்கு முன்னாடியே கட்சியை ஆரம்பிச்சிட்டேன்... வேணும்னா அவர் எங்களுடன் வந்து கூட்டணி வைத்துக் கொள்ளட்டும்" என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் ஒரு செய்தி கசிந்தது.. அந்த கட்சி எப்படி, கவுண்டர் சமுதாய ஓட்டுக்களை ஓரளவு தக்க வைத்து கொண்டுள்ளதோ, அதேபோல நாடார்களின் வாக்குகளையும் பெற்றுள்ளது.
அதேசமயம், இந்த ஓட்டுக்களின் எண்ணிக்கையை வலுப்படுத்தவும், பெருக்கவும் திட்டமிடப்பட்டது.. அதனால்தான் சசிகலா புஷ்பாவிடம், கொங்கு மண்டலத்தில் உள்ள நாடார் சமுதாயத்தின் ஓட்டுக்களை அள்ள ஏற்கனவே ஒரு அசைன்மென்ட் தரப்பட்டதாக செய்திகளும் வந்தன.

பாஜக
இதற்கு பிறகு சரத்குமாரையும் குறி வைத்ததாக சொல்லப்பட்டது.. அதற்கேற்றபடி, சில வருஷமாகவே பாஜகவை சரத்குமாரும் விமர்சிக்காமலேயே உள்ளார்... விமர்சிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இவர் மோடிக்கு ஆதரவு அளிக்கும் வகையிலேயே பேசி வருவதுதான்முதல் சந்தேகமாக எழுந்து வந்தது.

விமர்சனம்
இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், சௌகிதார் என்பதற்கு ‘பாதுகாவலர்கள் அல்ல திருடர்கள்' என்று ராகுல்காந்தி அன்று இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி விமர்சித்திருந்தார்.. அப்போது சரத்குமார் ‘மோடி கள்வர்தான், மக்களின் மனம் கவர்ந்த கள்வர்' என்றார்.. அப்போதிருந்தே ஒரு இணக்கம் இருந்திருக்கவே கூடும் என்றும் கணிக்கப்பட்டது. அத்துடன், சரத்குமார் பாஜகவுக்கு தாவும் தருணம் வந்துவிட்டதோ என்றும் யூகிக்கப்பட்டது.

கன்னியாகுமரி
ஆனால் அதற்கு பிறகு ஒரு தகவலும் அதை பற்றி வெளிவரவில்லை.. இப்போது தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சு அடிபட்டு வருகிறது.. மற்ற கட்சிகளை போலவே சமத்துவ மக்கள் கட்சியும் இதை பற்றி பேச துவங்கிவிட்டது.. செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமக சார்பில் போட்டியிடுமாறு கட்சி நிர்வாகிகள் என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எங்களின் பயணம் சட்டப்பேரவை தேர்தலை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது.

ரஜினி
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன்... நான் அவருக்கு முன்பாகவே சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி 14 வருஷமாக அரசியலில் இருந்து வருகிறேன். ரஜினி வேண்டுமென்றால் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அதை வரவேற்பேன்" என்று கூறியுள்ளார்.
இந்த பேட்டியை பொறுத்தவரை 2 விஷயங்கள் தெளிவாகிறது.. ஒன்று, சட்டசபையில் சமக போட்டியிட போவது உறுதி... மற்றொன்று, ரஜினிக்கு சிக்னல் தந்துள்ளது!

ரஜினிகாந்த்
சில மாதங்களுக்கு முன்பு, "பாஜக-வில் இழுப்பதற்காகவே ரஜினிக்கு விருது தரப்பட்டது" என்று விமர்சித்தவர்..
அதுமட்டுமல்ல, ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பில், "ரஜினிகாந்த் கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.. ரஜினி பத்தி பேசினாலே டிவி, செய்தி நிறுவனங்களின் டிஆர்பி எகிறும்.. அதுக்காகவே அவரை பத்தி கருத்து கேட்கிறார்கள்.. அதனால ரஜினிகாந்த் பற்றி பேச வேண்டுமானால் என் பேங்க் அக்கவுண்ட்டில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் பண்ணுங்க.. அதுக்கப்பறம் ரஜினி பற்றி பேசுகிறேன்" என்று சொல்லி இருந்தார்.

சரத்குமார்
ஒரு விளையாட்டுக்காக சரத்குமார் இப்படி பேசினார் என்றாலும், ரஜினியின் வருகையை சரத்குமாரும் எதிர்நோக்கி உள்ளது தெள்ள தெளிவாகிறது.. சரத்குமாருக்கென்று ஒரு வாக்கு சதவீதம் உள்ளது.. தேர்தலில் இவர் நிற்கும்போதெல்லாம் இவரை சமூகம் இவரை கைவிடுவதில்லை.. மேலும் அரசியல் அறிவு உள்ளவர்.. தொடர்ச்சியாக பல அரசியல் நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்... இது எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் நெருக்கம் உள்ளது.

3வது அணி
எனினும், இந்த முறை இவர் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? என்பதை வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை.. அதிமுகவுடன் நல்ல இணக்கமான போக்கு உள்ளது.. எனினும், பாஜகவில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமோ? அப்படி இணைந்தால், ரஜினியும் அதில் இணைவாரா? அல்லது பாமக, ரஜினி, கமல், விசிக, சமக, கம்யூனிஸ்ட்டுகள், என்று 3வது அணியுடன் கூடிய கூட்டணி அமையுமோ என்ற எதிர்பார்ப்புகளும் அதிகமாகி உள்ளன... ஆக மொத்தம் "மாற்றம் ஒன்றே மாறாதது" என்பதைதான் இந்த தலைவர்கள் நமக்கு அடிக்கடி தங்கள் பேச்சுக்களின் மூலம் உணர்த்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications