தொடரும் தற்கொலை சம்பவங்கள்..! சென்னை ஐஐடி வளாகத்தில் மீண்டும் ஒரு மாணவர் சடலமாக கண்டுபிடிப்பு!
சென்னை: ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் மாணவர் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த மாணவர் ஏரோஸ்பேஸ் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அதேநேரம் இதுவரை தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உயிரிழந்தார்
இது தொடர்பாகச் சென்னை ஐஐடி வளாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையின் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர் ஒருவர் இன்று மாலை உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார். இந்தச் சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் கல்லூரிக்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணை
இது குறித்த போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீப மாதங்களில் பல தற்கொலை சம்பவங்கள் ஐஐடி வளாகங்களில் அரங்கேறி வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில், ஹைதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள ஐஐடிகளில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைகள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம்
முன்னதாக கடந்த ஜூலை மாதம் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் 22 வயதான இன்ஜினியர் இறந்து கிடந்தார். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அங்கு ப்ராஜெக்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த அவர், வேலை அழுத்தத்தைச் சமாளிக்க முடியவில்லை எனக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications