தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆஜரான இளமதி.. கடத்தியது யார் என நீதிபதியிடம் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: என்னை யாரும் கடத்தவில்லை. விருப்பப்பட்டே செல்வனை காதலித்து திருமணம் செய்தேன் என நீதிபதியிடம் இளமதி வாக்குமூலம் அளித்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கவுந்தர்பாடியை சேர்ந்தவர் செல்வன். இவரும் குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜோடி
இதையடுத்து சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இருவருக்கும் சுயமரியாதை திருமணம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை தாக்கிவிட்டு காதல் ஜோடியை காரில் கடத்தி சென்றனர்.
இளமதி
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று காதலனை மட்டும் மீட்டனர். அந்த இடத்தில் இளமதி இல்லை. இதனால் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜரானார். அவர் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.
நீதிபதி வீட்டில் ஆஜர்
இதையடுத்து அவர் அன்றைய தினம் இரவு 9 மணிக்கு தாயாருடன் அனுப்பி வைக்கப்பட்டார். அன்று ஈரோடு காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஆர் என் புதூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இதையடுத்து நேற்று காலை பவானி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கொளத்தூர் மணி உள்பட 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜீவபாண்டியன் வீட்டில் இளமதி ஆஜர்படுத்தப்பட்டார்.
விருப்பப்பட்டே திருமணம்
அப்போது நீதிபதியிடம் இளமதி கூறுகையில் என்னை யாரும் கடத்தவில்லை. செல்வனை காதலித்து நானாக விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை கடத்தியதாக செல்வன் புகார் கொடுத்த வழக்கு தொடர்பாக இன்று காலை மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகிறார்.