இளையராஜா அவர் இசையமைத்த பாட்டை பயன்படுத்தவே சிக்கல் வருது! வழக்கின் பின்னணி சொல்லும் வக்கீல் சரவணன்
சென்னை: "இளையராஜா தனது தளத்தில் பாடலை பயன்படுத்தினால் கூட காப்பிரைட் ஸ்ட்ரைக் வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்." என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களை யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சுமார் 1 மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.

1990களில் பாடல் ஒப்பந்தம் மேற்கொண்ட போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் பற்றி குறிப்பிடவில்லை என்றும் ஆடியோ ரீலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இளையராஜாவிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
சாட்சி கூண்டில் ஏறி இளையராஜா பதிலளித்தார். அவரிடம் பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாகவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டன.
குறுக்கு விசாரணையின் போது எத்தனை பங்களாக்கள் உள்ளது என்ற கேள்விக்கு இளையராஜா, எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகலாவிய பொருட்களை பற்றி எனக்குத் தெரியாது என பதில் அளித்தார். இளையராஜாவிடம் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, நீதிபதி, மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன், "இளையராஜா இண்டர்நெட்டில் தனது இசை, பாடல்களை வெளியிடக்கூடாது என 2010ல் மியூசிக் மாஸ்டர் என்ற நிறுவனம் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் மீண்டும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இன்று இளையராஜா நேரில் ஆஜராகி சாட்சி சொன்னார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இளையராஜா இயற்றிய பாடல்களின் காப்புரிமையை அவர் வேறு யாருக்கும் தரவில்லை. அது தொடர்பாக எந்த ஒப்பந்தத்தையும் அவர் மேற்கொள்ளவில்லை. அந்தப் பாடல்களை பயன்படுத்த யாராவது பணம் கொடுத்திருந்தாலும், அது லைசன்ஸ் கட்டண்ம் தான்.
1990களில் இண்டர்நெ பரவலாகவில்லை. யூடியூப் கிடையாது. அப்போது ஆடியோ கேசட் விற்பனைக்குத்தான் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அப்போது இண்டர்நெட் உரிமை எல்லாம் இல்லவே இல்லை. இல்லாத உரிமையைச் சொல்லி இப்போது, அந்தப் பாடல்களை இண்டர்நெட்டில் கொடுப்போம், இளையராஜா அதனை வேறு யாருக்கும் கொடுக்கமுடியாது எனக் கூறுகின்றனர்.
இளையராஜாவிடம் குறுக்கு விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவை வழக்கிற்கு சம்பந்தமில்லாதவை என வாதம் வைத்தோம். அதனை நீதிமன்றம் பதிவு செய்துகொண்டது.
இளையராஜா அந்தப் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது, ரிங்டோனாக பயன்படுத்த விற்க முடியாது என வழக்கில் தெரிவித்திருந்தனர். காப்புரிமை சட்டம், இசையின் உரிமையாளர் அதன் இசையமைப்பாளர் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டது. ஆனால், இவர்கள் 1990களில் வாங்கிய காப்பிரைட்டை வைத்துக்கொண்டு நாங்கள் தான் உரிமையாளர் எனக் கூறி வருகின்றனர்.
இளையராஜா தனது தளத்தில் பாடலை பயன்படுத்தினால் கூட காப்பிரைட் ஸ்ட்ரைக் வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தரப்பில் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications