ராஜா மோடி.. ராணி அண்ணாமலை.. யானை இளையராஜா.. “காவி படைகள்” பாஜக ஒட்டிய செஸ் போர்டு போஸ்டரை பாருங்க!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னையில் வைக்கப்பட்டு உள்ள போஸ்டரில் பாஜக தலைவர்கள் வரிசையில் இளையராஜாவின் புகைப்படமும் சேர்க்கப்பட்டு உள்ளது.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர். பலர் ஏற்கனவே சென்னைக்கு வருகை தந்து இருக்கின்றனர்.
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டு உள்ளது தமிழ்நாடு அரசு.

பிரதமர் வருகை
இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வர உள்ளார். இதற்காக சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.

மோடிக்கு ஸ்டிக்கர்
செஸ் ஒலிம்பியாட்டை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் சென்னையில் வைக்கப்பட்டு இருக்கும் செஸ் ஒலிம்பியாட் பேனர்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்பட ஸ்டிக்கர்களை பாஜகவினர் ஒட்டிச் சென்றனர்.

கருப்பு மை
இதேபோல் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை அவர் ஸ்டிக்கராக ஒட்டினார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் பிரதமர் மோடியின் படத்தை ஒட்ட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தின் மீது பாஜகவினர் ஒட்டிய பிரதமர் நரேந்திர மோடி படம் மீது தந்தை பெரியார் திராவிட கழத்தை சேர்ந்தவர்கள் கருப்பு மை அடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பாஜக போஸ்டர்
சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பாஜக சார்பில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் வட சென்னையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரில் "உலக தலைவரை வரவேற்கிறோம். காவி படையினர்." என்று குறிப்பிட்டு செஸ் காய்களின் மேல் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகியோரின் புகைப்படங்களுடன் நியமன எம்.பி. இளையராஜாவின் படத்தையும் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications