விவி மினரல்ஸ்சுக்கு எதிரான தாது மணல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: குமரி, நெல்லை, தூத்துக்குடி கடலோரங்களில் சட்டவிரோதமாக தாது மணல் எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும் என்றும், தாது மணல் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையும் விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது.
தாது மணலை கைப்பற்றி குடோன்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும், ரூ.5,832 கோடியை தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. சிறப்பு அதிகாரிகளை நியமித்து வழக்கை சிபிஐ கண்காணிக்க வேண்டும் என்றும், முறைகேடு புரிந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட் கூறியுள்ளது.

கடற்கரைகளில் சட்ட விரோதமாக தாதுமணல் எடுத்து வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்ட கடலோரப் பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தாது மணல் சட்டவிரோதமாக எடுத்ததாக எதிர்மனுதாரர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்து கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாது மணல் எடுப்பதற்காக, விவி மினரல்ஸ், டிரான்ஸ் வேல்டு கார்னெட் நிறுவனம் உட்பட 7 நிறுவனங்களுக்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் 52 உரிமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 6, கன்னியாகுமரியில் 6 என மொத்தம் 64 உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் ஆய்வு செய்ததில், 2018 முதல் 2022 ஆண்டு வரை இடையேயான ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அணுசக்திக்கு தேவையான மோனோசைட் தாது என்பது மிக முக்கியமான தாதுவாக இருப்பதால் அதை பிரித்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை. மோனோசைட் தாது பிரித்து எடுப்பதற்காக எந்த ஒரு புதிய கொள்கைகளையையும் மத்திய அரசு வகுக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ், கார்னெட், இலுமினைட் உள்ளிட்ட தாதுமணல் எடுக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வு தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிறகும் தாதுமணல் எடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் சரியானதுதான். சட்டவிரோதமாக தாது மணல் இருப்பு வைக்கப்பட்டதும், கடத்தப்பட்டதும் உறுதி செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு அரசால் விதிக்கப்பட்ட அபராதம் செல்லும்.
தாதுமணல் தொடர்பாக ககன் தீப் சிங் போடி, சத்தியபிரதா சாஹுவின் அறிக்கை செல்லும். சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாதுமணலை உடனடியாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட தாதுமணலுக்கான தொகை மற்றும் ராயல்டி தொகையை தனியார் நிறுவனங்களிடம் அரசு வசூலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
தாதுமணல் முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. மாநில போலீசார் பதிவு செய்த வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்படுகிறது. சிபிஐயிடம் மாநில போலீசார் நான்கு வாரங்களில் வழக்கின் ஆவணங்களை வழங்க வேண்டும். இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளின் பங்கு இருப்பதை புறந்தள்ள முடியாது. எனவே, சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications