அரசை விமர்சித்த நடிகர் விஜய்.. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தோரை நேரில் சந்தித்து ஆறுதல்
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணமம் என குற்றம்சாட்டிய நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான நடிகர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோர் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் கூறி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முதல் ஒவ்வொருவராக பலியாகி வருகின்றனர். தற்போது வரை 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில் தான் கள்ளச்சராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கள்ளக்குறிச்சி சென்று சிகிச்சை பெறுவோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, பலியானவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு நேரில் புறப்பட்டு சென்றார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றார். நேரடியாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்ற நடிகர் விஜய் அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி அவர் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பிறகு அவர் கருணாபுரம் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். முன்னதாக நடிகர் விஜய் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசை குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்ததாவது:
‛‛கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுபதாபங்களை தெரிவித்து கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். கடந்த ஆண்டு இதேி நிகழ்வு காரணமாக பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியிருந்தார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியது முதல் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்தார். மேலும் அரசுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்காத அவர் இன்று முதல் முதலாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி தொடர்பாக அரசின் அலட்சியம் தான் காரணம் என கூறி ஸ்பாட்டுக்கே நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications