இறக்குமதி வரி குறைப்பு? தடுமாறும் தங்க முதலீடு? SGB திட்டம் இலாபம் தருமா? விலை இறங்குமா?
சென்னை: மத்திய அரசு Import Duty வரியைக் குறைத்ததன் விளைவாக Sovereign Gold Bonds திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடு சரிவை சந்தித்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என ஒரு தயக்கம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது? தங்கத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தைரியமாக முதலீடு செய்யலாமா?
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் வழக்கமாகத் தாக்கல் செய்யப்படுவது. ஆனால் இம்முறை மக்களவைத் தேர்தல் காரணமாக , கடந்த பிப்ரவரி மாதமே ஒரு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது பிரதமர் மோடி தலைமையில் அரசு 3ஆவது முறையாக மத்திய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முழு பட்ஜெட்டையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் Sovereign Gold Bonds முதலீடு செய்யப்பட்ட தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நம்பி போட்ட பணம் திரும்ப கிடைக்குமா? என்ற அச்சம் பயனாளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் SGB திட்டத்தில் முதலீடு செய்வது நல்லதா? இலாபம் தருமா? என்பது பற்றி பங்குச் சந்தை ஆலோசகர் பங்குச் சந்தை வ.நாகப்பன் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார்.
அவர் SGB முதலீட்டில் போடப்பட்டுள்ள பணம் சரிவைச் சந்தித்துள்ளது பற்றிப் பேசும்போது, "தங்கத்தை வைத்து வர்த்தகம் செய்பவர்கள்தான் நாள்தோறும் அதன் விலை ஏற்றம் என்ன ஆகும்? கூடுமா? குறையுமா? என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். அப்படி நுட்பமாக ஆராயக் கூடியவர்கள் தங்கத்தை நேரடியாக வாங்காமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவிடலாம். சொல்லப்போனால், பங்குச் சந்தையில் வாங்கப்பட்ட வர்த்தகம் சார்ந்த பல பங்குகள் பூஜ்ஜியமாகி உள்ளது. அப்படி ஒருநாளும் இதுவரை தங்க முதலீடு என்பது பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் கீழே இறங்கியதே இல்லை.
ஒரு காலத்தில் 1200 ரூபாய் வரை விற்பனையான பங்குகள் பூஜ்ஜியமாகி உள்ளன. அதை நானே பார்த்திருக்கிறேன். தங்கம் அப்படியாக ஆனதே இல்லை. அதற்கான சாத்தியக்கூறுகளும் மிகமிக குறைவு. சீனா தங்கம் வாங்குவதைக் குறைத்துள்ளதால் விலை குறைந்துள்ளது உண்மைதான். அதற்காகப் பங்குச் சந்தையில் தங்க முதலீடு ஒரே அடியாகக் கீழே விழுந்துவிடாது. இந்த பட்ஜெட்டில் Import Duty வரியைக் குறைந்திருக்கிறார்கள். அதை ஏன் குறைத்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்? வெளிநாடுகளிலிருந்து தங்கம் வாங்கி வருவதால் நமக்கு அன்னியச் செலாவணி குறைவாக இருந்தது.
இந்தியா தங்கம், கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் ஆகியவற்றை அதிகமாக இறங்குமதி செய்துவந்தது. இப்போது எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆகவே, அதன் இறக்குமதி குறைந்துள்ளது. கூடவே நாமே ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். அடுத்ததாகத் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யில் அன்னிய செலாவணி அதிகம் உள்ளது. அதை குறைப்பதற்காகத்தான் கடந்த பட்ஜெட்டில் 15% Import Duty என்பதை நிர்ணயித்தார்கள். சரியாகச் சொன்னால், இந்த 15% என்பது மிகமிக அதிகம். இந்தளவுக்கு அதிக வரி போட்டால், மக்கள் அந்தப் பொருளைத் தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆகவேதான் சமீபகாலமாக தங்கக் கடத்தல் என்பது அதிகரித்துள்ளது. இதை உணர்ந்துதான் வரியை இந்த பட்ஜெட்டில் குறைத்துள்ளார்கள். Basic custom duty என்பதை 5% ஆக்கி இருக்கிறார்கள். ASED என்பது 5% ஆக இருந்ததை மாற்றி 1% ஆக குறைந்துள்ளார்கள். முன்பு 15% இருந்த வரியை இப்போது 6% ஆகக் குறைத்து உள்ளார்கள். இதை பட்ஜெட்டில்தான் குறைக்க வேண்டும் என்று இல்லை. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதைப் போலச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றலாம். அதைப் பற்றி மத்திய அரசு ஆலோசனை செய்வது நல்லது.

1992 மற்றும் 1994இல் பணத்தை டி வேல்யூவேஷன் செய்தது அரசு. அப்போது தங்கத்தின் விலையில் ஒரு வாரக் காலம் மாற்றங்கள் இருந்தது. அதன்பின்னர் சீரானது. அதைப் போன்றுதான் இந்த வரி குறைப்புக்குப் பின்னர் இரண்டு நாள் முன்னர் சின்ன தடுமாற்றம் இருந்தது. பொதுவாக ஒரு பொருள் விலை ஏறிக்கொண்டே இருந்தால், ஒரு இடத்திற்கு வந்த பிறகு ஒரு தேக்கம் நிலவும். அதன் பின்னர் சீராகும். அதே நிலைதான் இப்போது தங்க விலையில் நிலவுகிறது. அதன் காரணமாக Sovereign Gold Bonds மதிப்பு கடந்த 2 நாட்கள் சரிவைக் கண்டுள்ளது. இது நிலையானது இல்லை.
கடந்த 2015 நவம்பர் மாதம் முதல் Sovereign Gold Bonds அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 2,625 ரூபாய் இருந்தது. 2023இல் அதன் விலை 6,100 ரூபாய்க்கு மேல் இருந்தது. அப்படிப் பார்த்தால் 8 ஆண்டுகளில் 2 மடங்குக்கு மேல் விலை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு பங்குக்கு 3,475 ரூபாய் லாபம் கிடைத்தது. இந்த லாபத்திற்கு வருமானவரி கிடையாது. கூடவே வருடம் 2% வட்டி வழங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் 20% வட்டி தொகை கிடைத்துள்ளது.
ஆக, இன்றும் தங்கத்தை முதலீடாக நினை பணம் போடுபவர்களுக்குச் சரியான ஒரு திட்டம் என்பது Sovereign Gold Bonds தான். சந்தையில் விலை குறையும் போது அதன் பாதிப்பாகத் தங்கப் பத்திரத்தில் விலை இறக்கம் ஏற்படுவது இயற்கை. ஏனென்றால் 2,625 ரூபாயில் தொடங்கிய விலை 8 ஆயிரத்தைத் தொட்டு விட்டு இப்போது கொஞ்சம் சரிவைச் சந்தித்துள்ளது. ஆண்டுக்குச் சராசரியாக 2 ஆயிரம் ரூபாய் விலை ஏற்றம் இருந்துள்ளது.
அதனால் இப்போது ஏற்பட்டுள்ள சரிவு பெரிய நஷ்டம் இல்லை. இந்த விலை குறைவு ஒரு திடீர் அதிர்ச்சியை மக்களுக்கு அளித்துள்ளது. அது ஏற்படவே செய்யும். மத்திய அரசின் வரி குறைப்பால் 9% இழப்பு என்பது உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது லாபமாகவே உள்ளது. எனவே Sovereign Gold Bonds திட்டத்தில் தயங்காமல் முதலீடு செய்யலாம் " என்கிறார்















Click it and Unblock the Notifications