தீபம் பார்க்கத் தான் போகமுடியவில்லை! கிரிவலத்துக்காவது போகனும்னு ஆசையா! அமைச்சர் விடுத்த அறிவிப்பு!
சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு 27,000 சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பொதுமக்கள் இச்சேவையினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மட்டுமின்றி விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி என தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலிருந்து, சிறப்புப் பேருந்து சேவை 3 நாட்களுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
திருவண்ணாமலைக்கு தீபம் பார்க்கத் தான் போகமுடியவில்லை, கிரிவலத்துக்காவது போகலாம் என்ற யோசனையில் இருப்போர் அரசுப் பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனிடையே இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விடுத்த அறிவிப்பின் விவரம் வருமாறு;

திருவண்ணாமலை திருக்கோயில்
முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,2022- திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5ம் தேதியிலிருந்து வரும் 7ம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை திருக்கோயிலில் இன்று 06.12.2022 கார்த்திகை மகா தீபத்திருவிழா மற்றும் 07.12.2022 அன்று பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.

முக்கிய நகரங்கள்
இதை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளுவதால், அவர்களின் பேருந்து தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், சென்னை-தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு ஏற்பாடு
சென்னையில், கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பயணிகள் அடர்வு குறையும் வரை, தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கிட ஏற்பாடு செய்திடவும், இப்பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும், உரிய அலுவலர்கள் பணியமர்தப்பட்டுள்ளனர்.

பயன்படுத்திக் கொள்க
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையின்படி, சம்மந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். மேலும், சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் இன்றியும், பொதுமக்கள் சிரமமின்றியும் பயணம் செய்திட ஏதுவாக, அரசுப் பேருந்துகளை இயக்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இச்சேவையினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications