சென்னை கடற்கரை டூ தாம்பரம்.. மின்சார ரயிலில் இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய ‘அலர்ட்’!
சென்னை: சென்னையில் மின்சார ரயில்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்பவர்கள் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். தினசரி லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் மின்சார ரயில்களை தங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை மலிவான போக்குவரத்து, இந்த மின்சார ரயில்களே.

இந்நிலையில், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை முதல் கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் கடைசி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் கடைசி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (நவம்பர் 29) முதல் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை 16 நாட்களுக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி ரயில் இயங்காது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவ.29 முதல் டிச.14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications