பெண்களுக்கு ‘ஜாக்பாட்’ அறிவிப்பு வருதா? உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
சென்னை: தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் பற்றிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும். லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், முக்கியமான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்.12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர், தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு முழுவதுமாக வாசித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே சர்ச்சைகள் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் இன்று (பிப்ரவரி 19) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின், தன் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் தங்கம் தென்னரசு. அதைத்தொடர்ந்து, பிப்.20ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
"தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி" என்ற வாசகத்தோடு 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அத்துடன் பட்ஜெட் அறிவிப்பு தொடர்பான அம்சங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மாபெரும் 7 தமிழ் கனவுகள் என்று பட்ஜெட் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சமூகநீதி, கடைகோரி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இணைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலன், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளின் அடிப்படையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் தொடர்பாக தமிழக மக்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முக்கியமான அறிவிப்புகளோடு திமுக அரசின் பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, பெண்களின் அபிமானம் பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழக அரசின் முதன்மை திட்டம் என கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக அரசின் பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும், மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறி 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளிகளை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிக்குள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வந்தனர். தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர்.
2023 ஜனவரி முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் உள்ளது. புதிதாக விண்ணப்பித்த சில லட்சம் பேருக்கும் இன்னும் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் உள்ளன. ரேஷன் அட்டைகள் கிடைக்கப்பெற்ற உடன் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தயாராக உள்ளனர்.
எனவே தமிழ்நாடு அரசின் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த ஆண்டு இணைக்கப்பட உள்ள பயனாளர்களையும் கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கப்படும். அதைத் தொடர்ந்து புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைக்க வழிமுறைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை பெற, இரண்டாம் முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு, இன்னமும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. லோக்சபா தேர்தல் விரைவில் வர உள்ளதால், பொதுமக்களை, குறிப்பாக பெண்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications