நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு.. சோதனையில் சிக்கியது என்ன? என்ஐஏ பரபர அறிக்கை
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் இன்று என்.ஐ.ஏ சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக என்ஐஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலரது வீடு, தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாரிகள் 6 பேருக்கு சொந்தமான வீடுகள், தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும் வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. சென்னை கொளத்தூர் நேர்மை நகரில் உள்ள பாலாஜி என்பவர் வீட்டிலும், கோவையில் ஆலந்துறை ஆர்.ஜி.நகர் பகுதியில் உள்ள ரஞ்சித் குமார் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியது.
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 6 இடங்களில் நடந்த சோதனையில், ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், 4 பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெசிய புலனாய்வு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications