தட்டுப்பாடு வரக்கூடாது.. கவனமா இருங்க.. ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய ஆர்டர்.. ஸ்டாலின் அதிரடி!
சென்னை: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளுக்கு முக்கியமான ஒரு உத்தரவு சென்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தக்காளி விலை காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
காலையிலேயே மக்கள் வந்து லைனில் நிற்க தொடங்கி விடுகிறார்கள். 9 மணிக்கு ரேஷன் கடை திறந்தாலும் கூட 8 மணிக்கே மக்கள் வந்து லைனில் இருக்கும் நிலை உள்ளது. இன்று சென்னையில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட 90 ரேஷன் கடைகளிலும் 20 - 30 அடிக்கு நீண்ட லைன் நின்றது. வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் கூடுதல் தக்காளி இதனால் விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய உத்தரவு: இந்த நிலையில் தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளுக்கு முக்கியமான ஒரு உத்தரவு சென்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதன்படி எக்காரணம் கொண்டும் ரேஷன் கடைகளில் தக்காளி தட்டுப்பாடு ஏற்பட கூடாது.
முறையான தக்காளிகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அது கொள்முதல் செய்யப்பட்ட விலைக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும். ரேஷன் கார்டுக்கு சரியாக தினமும் 1 கிலோ கொடுக்கும் அளவிற்கு தக்காளி இருக்க வேண்டும். தக்காளி இருப்பில் தட்டுப்பாடு இருக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. முடிந்த அளவு காயாக இருக்கும் நிலையில் தக்காளிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம்.
தக்காளி விலை: இந்தியா முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.
ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. நேற்று 100 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று மேலும் 20 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற பொருட்கள்: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்விற்கு இடையில் தற்போது துவரம் பருப்பின் விலையும் உயர்ந்து உள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. கடந்த வாரம் 70-90 ரூபாய்க்கு விற்ற பருப்பு தற்போது 50-60 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.
அண்டை மாநிலங்களில் விளைச்சல் கம்மியாக இருப்பதால் பருப்பு விலை உட்பட மளிகை பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில்தான் ஏற்கனவே ரேஷனில் வழங்கப்படும் தக்காளி, துவரம் பருப்புடன் சேர்த்து மற்ற மளிகை பொருட்கள் ரேஷனில் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications