தங்க நகைக்கடன் விதியில் மாற்றம்? என்னாது ரூ.4 லட்சமா? நகையை அடகு வைப்போருக்கு விரைவில் குட் நியூஸ்?
சென்னை: வங்கிகளில் தங்க நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி கொண்டே வருகிறது. அவசர தேவைகளுக்கு பெரும்பாலும் நகைக்கடனையே பொதுமக்கள் அதிகமாக நம்பியிருக்கும் சூழலில், புதிய விதியை மாற்றி, பழைய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கிய தகவல் கசிந்து வருவது, பொதுமக்களுக்கு ஆறுதலையும், எதிர்பார்ப்பையும் தந்து வருகிறது.
ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு அவசரத்துக்கு கைகொடுத்து உதவி கொண்டிருப்பது தங்க நகைக் கடன்கள் மட்டுமே.. ஆனால், கடந்த மாதம் ரிசர்வ் வங்கி பிறப்பித்த புதிய விதிகள், பொதுமக்களுக்கு சிக்கலை உண்டுபண்ணி வருகிறது.

அதாவது, நகைக் கடன் பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும், காலக்கெடு முடியும் போது, வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்த வேண்டும், அதற்கு அடுத்த நாளில் தான் நகையை மறு அடகு வைக்க முடியும் என ரிசர்வ் வங்கி புதிய விதியை கொண்டுவந்துள்ளது..
தங்க நகைகள் அடமானம்
வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, அடுத்த நாள் தான் மறுபடியும் அடகு வைக்க முடியும் என்பதால், வட்டி மட்டும் கட்டி அதே நாளில் மறு அடகு வைக்க முடியாது. ஏற்கனவே தங்கத்தின் விலை எகிறி வரும் நிலையில், கூடுதல் நிதியை பெறுவதற்கு முன்பு, முழு கடன் தொகையையும் திரும்ப செலுத்த வேண்டிய நெருக்கடியும், சுமையும் அதிகமாகிறது. இதனால், முறைசாரா கடன் அல்லது தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலையை உருவாக்கிவிடும்.
எனவே, பழைய நிலைமையையே மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது .. இப்படிப்பட்ட சூழலில, கூட்டுறவு வங்கிகளில், 2 லட்சம் ரூபாய்க்கு மேல், நகைக்கடன் வாங்கியவர்கள், மாதந்தோறும் வட்டி செலுத்த வங்கிகள் தரப்பில் நெருக்கடி கொடுப்பதாக புகார்களும் பெருகி வருகின்றன..
மன உளைச்சலில் ஏழை எளிய மக்கள்
இதுகுறித்து, நகைக்கடன் பெற்றவர்கள் சொல்லும்போது, "கையில் பணம் இருக்கும்போது, வட்டி, அசல் செலுத்துகிறோம். ஆனால், உடனே வட்டியை கட்டுமாறு அதிகாரிகள் நிர்ப்பந்திக்கிறார்கள்.. மாதம்தோறும் வட்டி செலுத்த சொல்லி நெருக்கடி தருவது நியாயம் இல்லை. இது எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது" என்கிறார்கள்.
ஆனால், இந்த புகார்கள் குறித்து கூட்டுறவு வங்கிகள் தரப்பில் சொல்லும்போது, ரிசர்வ் வங்கி விதிப்படி, 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கியவர்கள், வருடத்துக்கு வட்டி செலுத்தலாம். அதற்கு மேல் கடன் தொகை வாங்கியவர்கள், 3 மாதங்களுக்கு ஒரு முறை, வட்டி, அசலை செலுத்த வேண்டும். அதனால்தான், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களிடம், விதிப்படி வட்டி செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால், இந்த விதிமுறையால் பலரும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.. இதனால், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பின்பற்றப்படும் விதிகளை, 4 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கியவர்களுக்கு அமல்படுத்த, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது.. அந்த அனுமதி கிடைத்ததுமே, உடனே செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு சாதகம் ஏற்படும்
கூட்டுறவு வங்கிகளின் இந்த உத்தரவானது, ஏழை எளிய மக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது. ஏனென்றால், கடன் பெற்றவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைப்பதற்காகவே, இந்த புதிய விதிகளை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் காரணம் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, நகைக்கடனுக்கான அசலை கட்டுவதற்காக, கடன் வாங்கும் நிலைமை ஏற்படும் என்றும் இது ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமானதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன.
தங்களது நகைகள் ஏலத்துக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே, அதிக வட்டிக்கு வெளியில் பணம் வாங்கி நகையை மீட்டு, மீண்டும் அடகு வைக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாவதால், அவசரத்துக்கு வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என வாங்கி, இவர்களுக்கு தனியாக வட்டியை கட்ட வேண்டியிருப்பது கூடுதல் நெருக்கடியை தருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இது முறைசாரா கடன் அல்லது தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலையை உருவாக்கிவிடும் என்பதால், கந்துவட்டியை ஊக்குவிக்கும் இந்த செயலை நிறுத்திவிட்டு, நகைக்கடனில் பழைய நிலையை கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.












Click it and Unblock the Notifications