ஃபாசிச அணுகுமுறை.. மும்மொழி கொள்கையை வலிய திணிப்பது ஜனநாயகத்து எதிரானது.. தவெக விஜய்
சென்னை: மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும் என்றும், மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, நிதி ஒதுக்கமாட்டோம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி மக்கள் பக்கமே தமிழக வெற்றிக் கழகம் நிற்கும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் மூலம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் கல்வி நிதி ரூ.2152 கோடி மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு குற்றம் சுமத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரும் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் இன்னும் நிதி வந்தபாடில்லை. தேசியக் கல்வி கொள்கையினை ஏற்றுக்கொண்டால் தான், நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்ததாக, தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கும் தமிழக அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது. இத்தகைய சூழலில், மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும் என்றும், மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, நிதி ஒதுக்கமாட்டோம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது.
பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications