அதிரடி.. சென்னையில் 132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் ஒரேநாளில் இடமாற்றம்! பின்னணியில் பரபர காரணம்
சென்னை: சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் பணியாற்றி வரும் 132 நுண்ணறிவு பிரிவு (Intelligence)காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பணிஇடமாற்றத்தின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் போலீஸ் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளனர். Intelligence எனும் நுண்ணறிவு பிரிவு இதில் முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் வரும் பிரச்சனைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தும் பணியை இந்த பிரிவை சேர்ந்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாவட்ட வாரியாக இந்த நுண்ணறிவு பிரிவில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக பதற்றம் நிறைந்த மாவட்டங்களில் இவர்களின் பணி என்பது சிறப்பாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில் தான் தற்போது சென்னையில் உள்ள 12 மாவட்டங்களில் பணியாற்றி வரும் 132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இத்தகைய பணி இடமாற்றம் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கேட்டபோது நிர்வாக காரணங்களாக இந்த பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பணி இடமாற்றத்தின் பின்னணியில் வேறு காரணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது சென்னையில் நுண்ணறிவு போலீஸ் பிரிவை பலப்படுத்தும் நோக்கத்தில் காவல்துறை தரப்பில் இந்த பணிஇடமாற்ற நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் சமீபத்தில் தான் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அதன்படி இதற்கு ஏற்ப இந்த பணிஇடமாறுதல் என்பது இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையில் போலீஸ் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி சட்டசபையில் காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையில் உள்ள நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த சில மாதங்களாக டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் ஆகியோருடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறைச் செயலாளர் அமுதா ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனை மற்றும் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏற்ற நிலையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வௌியிட்டுள்ளது. அதில் இந்த பிரிவுக்காக ரூ.60 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 383 பணியாளர்களுடன் செயல்படும். இந்த படைக்கு 193 அதிகாரிகள், 190 துறையில் பணியாற்றும் அதிகாரிகள், 36 அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு, தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி தலைமை வகிப்பார் என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது சென்னையில் 12 காவல் மாவட்டங்களில் பணியாற்றும் 132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
****












Click it and Unblock the Notifications