இது தொடக்கம் தான்.. சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. விமானங்கள் தரையிறங்க முடியாமல் அவதி
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இன்று மாலையில் திடீரென்று கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. இந்த கனமழையால் சென்னை, புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் மழை என்பது இல்லை. வெயில் தான் அதிகமாக இருந்தது. இந்நிலையில் தான் இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும். வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.

சென்னையை எடுத்து கொண்டால் நேற்று மாலையில் சில இடங்களில் மழை பெய்தது. அதன்பிறகு இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரித்தது. கடும் வெயிலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் இன்று மாலையில் சென்னையில் வானிலை நிலவரம் சட்டென மாறியது. வெயில் தணிந்து கருமேகங்கள் சென்னை, புறநகர் பகுதிகளை சூழ்ந்தது. மாலை 5 மணி முதல் சில இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், அம்பத்தூரில் பலத்த மழை பெய்தது.
அதேபோல் சிந்தாதிரிபேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான கோயம்பேடு, வானகரம், கந்தன்சாவடி, தரமணி, வேளச்சேரி, மதுரவாயல், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக மதுரவாயலில் பேய்க்காற்றுடன் கனமழை கொட்டியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்க தொடங்கியது.
திடீரென பெய்த இந்த மழையால் பள்ளி, கல்லூரி முடித்து வீட்டுக்கு புறப்பட்ட மாணவ-மாணவிகளும், அலுவலகம் முடித்து வீட்டுக்கு புறப்பட்ட ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் இன்று காலை முதல் வெயில் அடித்த நிலையில் மாலை நேர மழை சென்னையை குளிர்வித்தது. இந்த மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 12க்கும் அதிகமான விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மழை நின்றபிறகு விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்கின.
மேலும் சென்னையை பொறுத்தவரை இது தொடக்கம் தான். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று பல இடங்களில் கனமழை பெய்துள்ளது.
மேலும் சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் சென்னையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை ஓய்வெடுத்த நிலையில் நேற்று முதல் மாலை நேரங்களில் சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் இது சென்னை மழையின் தொடக்கமாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications