ஹைவே கான்ட்ராக்ட்ல தப்பு நடந்தா சொல்லுங்க.. நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.. முதல்வர் பேச்சு
சென்னை: தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி பேரவையில் கூறினார்.
இதன் ஒரு பகுதியாக பெருங்களத்தூரிலிருந்து, சிங்கப்பெருமாள் கோவில் வரை தற்போதுள்ள 4 வழிச்சாலை விரைவில் 8 வழிச்சாலையாக மாற்றப்படும் என அறிவித்தார். மேலும் பெருங்களத்தூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பன்னடுக்கு மேம்பாலம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்

தொடர்ந்து பேசிய முதல்வர் இடையில் மணல் தட்டுப்பாடு காரணமாக மேம்பால கட்டுமான பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டது. தற்போது அந்த பிரச்சனை தீர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் தவறுகள் நடந்தால் சுட்டிக்காட்டுங்கள், நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
சென்னையில், கால்வாய் ஓரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 71,268 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இவை. எனவே நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 14,400 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு குடியிருப்பவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். பேரவையில் இன்று நெடுஞ்சாலைத்துறை சார்பாகவும் அறிவிப்புகள் வௌியிடப்பட்டன. அதன்படி ரூ.3.50 கோடி மதிப்பீட்டில், 9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
சாலை மேம்பாலங்கள் 7 இடங்களில் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 1456 கிமீ நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications