குப்பை கிடங்கை தோண்டினால் ஷாக்.. மதுரை, சென்னையில் ரூ.180 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. பரபரப்பு
சென்னை: மதுரை, சென்னையில் இன்று ஒரே நாளில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதிகை ரயிலில் போதைப்பொருள் கடத்திய நபரை இன்று மதுரையில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்த நிலையில் அவரிடம் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் கூறிய தகவலின்பேரில் சென்னையில் குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருள் பறிமுதலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானில் இருந்து குஜராத்துக்கு கடத்திவரப்பட்ட போதைப்பொருள் சமீபத்தில் சிக்கியது. இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து டெல்லியில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழகத்தை சேர்ந்த 3 பேர் சிக்கினர்.

அதாவது கடந்த மாதம் டெல்லி கைலாஷ்பார்க் பகுதியில் உள்ள குடோனில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த போதைப்பொருள் கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை அதிகாரிகள் தேட தொடங்கிய நிலையில் அவர் தலைமைறைவானார். அவரை தற்போது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள் தேடி வருகின்றனர். அவரது சென்னை வீட்டில் சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே தான் ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
மேலும் தமிழகத்திலும் போதைப்பொருள் தொடர்பான சோதனை என்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்டி இன்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ்சில் ரூ.90 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் கடத்தி சென்றதாக சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என்பவை மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின்போது அவர் சில முக்கிய விஷயங்களை கூறினார். இதையடுத்து அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார். அப்போது தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி செல்வது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கூறிய தகவலின்பேரில் சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் னெ்னை கொண்டங்கையூர் குப்பை கிடங்கில் அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது. அதன் மதிப்பும் ரூ.90 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி இன்று ஒரே நாளில் சர்வதேச சந்தையில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தாபெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications