கோவையின் வரலாற்றில் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் இப்படி கூட்டத்தை பார்த்ததே இல்லை
கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை உள்ள நகரம் என்றால் அது கோவை தான். கோவையில் வெளியூர்களை சேர்ந்த பல லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். தொழில் மற்றும் வேலை காரணமாக கோவையில் செட்டில் ஆகியிருந்தாலும் வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நேற்று சொந்த ஊர்செல்ல முயன்றார்கள். இதனால் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் தனது வரலாற்றில் இல்லாத கூட்டத்தை முதல் முறையாக பார்த்தது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் தான் தமிழ்நாட்டில் படித்து முடித்த இளைஞர்களின் முதல் தேர்வாக இருக்கிறது. ஆனால் கோவையை பொறுத்தவரை, சென்னையை போல் வேலை கிடைப்பதோ அல்லது வேலையில் சேர்ந்த உடன் ரூம் தேடுவதோ அல்லது வீடு தேடுவதோ கடினமானது இல்லை.. எளிதாக வேலையும் கிடைத்துவிடுகிறது.. நல்ல சம்பளம்.. நல்ல வாழ்க்கை தரம் உள்ள மாநகரம் என்றால் நிச்சயம் சென்னையைவிட கோவை பெட்டரான நகரமாகவே இன்றும் இருக்கிறது.

ஏனெனில் சென்னை அளவிற்கு கோவை இன்னும் கடுமையான நெரிசலையோ அல்லது கடுமையான மக்கள் அடர்த்தியோ வரவில்லை.. அதேநேரம் கோவையில் பல ஆயிரம் நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு லட்சக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள். இதில் பலர் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்கள் பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை, சுதந்திர தினம், குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் சொந்த ஊருக்கு அதிகமாக செல்வார்கள்.
அப்போது கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருக்கும். மக்கள் அடித்து பிடித்த பேருந்துகளில் ஏறி செல்வார்கள்.. இதனால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் எல்லா ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மக்களை போலீசார் வரிசையில் நிற்க வைத்து பேருந்துகளில் நெரிசல் இல்லாமல் ஏறி செல்ல உதவுவார்கள். இதனால் எவ்வளவு தான் கூட்டம் இருந்தாலும் மக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று வந்தார்கள்.
ஆனால் நேற்று சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் திரண்டார்கள். இதனால் மொத்த பேருந்து நிலையமும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. போலீசாரால் கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் என பல்வேறு பேருந்துகளில் ஏற மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்தார்கள். ஏனெனில் எல்லா பேருந்துகளிலும் கூட்ட நெரிசல் கடுமையாக இருந்தது.
பல பேருந்துகள் சிங்காநல்லூருக்குள் வரும் போதே கூட்டத்தை அள்ளிப்போட்டபடி தான் வந்தது. ஏனெனில் பல பயணிகள் ஒண்டிப்புதூர் பாலத்திற்கு முன்பே பேருந்துகளை வழிமறித்து ஏறிக்கொண்டனர். இதனால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இடம் கிடைக்கும் என்று நினைத்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். விடிய விடிய கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு வந்த எல்லா பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோவையின் வரலாற்றில் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் இப்படி கூட்டத்தை பார்த்ததே இல்லை என்று பல பயணிகள் நொந்தபடியே பேருந்துகளில் ஏறி சொந்த ஊர் சென்றனர்.












Click it and Unblock the Notifications