என்ன பண்ண.. உங்க கதையை கேட்டால் சோகமாக தான் இருக்கு! அதிமுக எம்.எல்.ஏ.வை கலாய்த்த துரைமுருகன்!
சென்னை: சட்டசபையில் கேள்வி எழுப்பி பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலிடம், உங்க கதையை கேட்டால் சோகமாக தான் இருக்கிறது எனக் கூறி அமைச்சர் துரைமுருகன் கலாய்த்தார்.
வெறுமனே பாலம் என்று கூறினால் எப்படி என்றும் அந்தப் பாலம் பஞ்சாயத்து பாலமா, நெடுஞ்சாலைத்துறை பாலமா, நீர்வளத்துறை கட்டிய பாலமா என்ற விவரத்துடன் பேச வேண்டும் என அட்வைசும் வழங்கினார்.
இதேபோல் மானாமதுரை திமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழரசி கூறிய கிராமங்களை பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது என்றும் கோரிக்கையாக ஒரு மனு எழுதிக் கொடுத்தால் அதை துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கேள்வி நேரம்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் 4வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கேள்வி நேரத்தின் போது பேசிய மதுராந்தகம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பாலம் தொடர்பான ஒரு கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், உங்க கதையை கேட்டால் சோகமாக தான் இருக்கிறது எனக் கூறி கலாய்த்ததுடன் சில அட்வைஸ்களையும் வழங்கினார். சட்டசபையில் பேசுவதற்கு முன்னர் முழு விவரத்துடன் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

விவரம் வேண்டும்
பாலம் பிரச்சனை குறித்து வெறுமனே பேசக்கூடாது என்றும் அந்தப் பாலம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் வருகிறதா, பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறதா, அல்லது நெடுஞ்சாலைத்துறையின் ஒரு பிரிவின் கீழ் வருகிறதா என்ற விவரத்துடன் பேசியிருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன். எல்லா பாலங்களுக்கும் தனது நீர்வளத்துறை பொறுப்பு கிடையாது எனவும் இருப்பினும் உன் கோரிக்கை நியாயமானது என்பதால் எல்லா அமைச்சர்களும் கவனித்திருக்கிறோம், யாராவது ஒருவர் நிறைவேற்றிக் கொடுப்போம் என துரைமுருகன் பதிலளித்தார்.

கோரிக்கை நியாயம் தான்
பேச்சுவழக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரை ''உன் கோரிக்கை'' என துரைமுருகன் ஒருமையில் குறிப்பிட்டார். துரைமுருகனின் வயது கருதி இந்த விவகாரத்தை அதிமுக பெரிதுபடுத்தவில்லை. இதேபோல் தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பட்டென பதிலளித்தார். மானாமதுரை திமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழரசி கூறிய கிராமங்களை பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது என்றும் கோரிக்கையாக ஒரு மனு எழுதிக் கொடுத்தால் அதை துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சரியாக தெரியவில்லை
இதேபோல் பழனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் எழுப்பிய குதிரையாறு அணை, நெய்காரப்பட்டி பாலம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், குதிரையாறு அணை தனது இலாக்காவுக்குள் வருவதாகவும் ஆனால் பாலம் விவகாரம் தனது துறையின் கீழ் வருமா அல்லது அமைச்சர் எவ வேலு துறையின் கீழ் வருமா என்பது தனக்கு சரியாக தெரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications