ஆமா.. கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார்? ம.நீ.ம மகேந்திரன் செம பதில்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது பற்றிய அந்த கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சமீபகாலமாக சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது பிரச்சார பயண உரைகளுக்கு மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பற்றி கமல்ஹாசன் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த நிலையில் திமுக பொதுக் கூட்டத்தில் நேற்று உரை நிகழ்த்திய ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கமல்ஹாசன் விமர்சனம்
இந்த அறிவிப்பு தங்களைப் பார்த்து நகல் எடுத்தது போல இருப்பதாக கமல்ஹாசன் நேரடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். தங்களது தூய்மை உள்ளிட்ட விஷயங்களையும் இதேபோல நகலெடுத்தால் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
எந்த தொகுதி
இப்படியாக தேர்தல் காலத்தில் தினமும் ஒரு செய்திகளில் அடிபட்டு வருகிறார் கமல்ஹாசன். மற்றொரு பக்கம் அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது.
கமல்ஹாசன் தொகுதி
தென்சென்னை பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. லோக்சபா தேர்தலில் அதிக வாக்குகளை அந்த பகுதியில் இந்த கட்சி வாங்கியது. எனவே, அங்கு ஒரு தொகுதியில் கமல்ஹாசன் களமிறங்குவார் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள்.
கமல்ஹாசன் தொண்டர்கள்
இந்த நிலையில்தான் இன்று, மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன் இன்று அளித்த பேட்டி: எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் தலைவர் நிற்கலாம். 234 தொகுதியில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். இன்னும் "நான்கைந்து நாட்களில்" அது தெளிவாகி விடும். என்று மகேந்திரன் தெரிவித்தார்.