கமல்ஹாசனின் கையில் மூன்று தொகுதிகள்... வெற்றிவாய்ப்பு குறித்து அலசி ஆராயும் பிரத்யேக குழு..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதற்காக 3 தொகுதிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
வெற்றிவாய்ப்பு, வாக்காளர்கள் நிலவரம், தொகுதிப்பிரச்சனைகள் குறித்தெல்லாம் பிரத்யேக குழு ஒன்று கமலுக்காக ஆராய்ந்து வருகிறது.
வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் கூட்டணி விவகாரத்தில் கமல் இறுதி முடிவு எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு பிறகு தாம் போட்டியிடும் தொகுதியை அவர் தேர்வு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதல் தேர்தல்
மக்கள் நீதி மய்யம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களம் கண்டது. இந்த முறை சட்டமன்றத் தேர்தல் என்பதால் மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடன் தனது ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைத்து வருகிறது.

மிகுந்த கவனம்
அந்த வகையில் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தாம் போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் தொகுதி தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மூன்று தொகுதிகளை கமல் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

வேளச்சேரி தொகுதி
சென்னையை பொறுத்தவரை கமல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டாலும் மநீம வினர் அதனை நமக்கு உறுதிப்படுத்தவில்லை. மாறாக வேளச்சேரி தொகுதி கமலின் சாய்ஸ்களில் ஒன்றாக இருக்கிறதாம். காரணம் அங்கு ஐடி துறை பணியாளர்கள், படித்தவர்கள், குறிப்பாக இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ளது தொகுதி என்பது தான். கமல் சென்னை மாவட்டத்திற்குள் போட்டியிட விரும்பினால் அவரது தேர்வு வேளச்சேரியாக தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம்
ஒருவேளை அவர் சென்னையை தவிர்த்து பிறமாவட்டங்களில் போட்டியிட விரும்பினால் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் அவரது அடுத்த சாய்ஸாக உள்ளதாம். இதேபோல் தனது மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய மதுரை மண் மீதும் கமலுக்கு ஒரு கண் இருக்கிறது. அண்மையில் இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதும் இதே மதுரையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications