வருமான வரி கட்டுவோர் மட்டுமல்ல.. "இவங்களுக்கும்" பொங்கல் கிப்ட் உண்டு.. வந்தது தமிழக அரசின் ஜாக்பாட்
சென்னை: அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் கிப்ட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வெடித்து கிளம்பிய நிலையில், தற்போது, தமிழக அரசு அதனை நிறைவேற்றி உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சிரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

தமிழகத்தில் வழக்கமாகவே, பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணமும் அளிக்கப்பட்டு வரும்நிலையில், இந்த வருடமும் பரிசுத்தொகை அறிவிக்கப்படவில்லையே என்ற ஏக்கம் தென்பட்டது. ஆனாலும், உடனடியாக பொங்கல் பரிசுடன் ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு சர்ப்ரைஸ் தந்தது.
ரேஷன்: அதேசமயம், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய கார்டுதாரர்கள் அனைவருக்குமே தலா, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட உள்ளதாகவும், அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க உள்ளதாகவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இதையடுத்து, 4 லட்சம் ரேஷன்தாரர்கள் உட்பட வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் என்று 24 லட்சம் கார்டுதாரருக்கு பரிசு தொகுப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியானது. இதனால், ஒருதரப்பினர் அதிருப்திக்கு ஆளானார்கள்.. ஏற்கனவே, மகளிர் உரிமைத்தொகை பலருக்கும் தரப்படவில்லை என்ற அதிருப்திகள் வலம்வந்தன.. இப்போது பொங்கல் பரிசுத்தொகையிலும் இதே அதிருப்தி எழுந்தது.
அரசு ஊழியர்கள்: அரசு ஊழியர்களை பொறுத்தவரை, ஏற்கனவே திமுக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.. பழைய பென்ஷன் திட்ட வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாத வருத்தத்தில் உள்ளனர்.. இனி இவர்களுக்கும் சலுகை மறுக்கப்பட்டால், கிட்டத்தட்ட 17 லட்சம் அரசு ஊழியர்கள் உட்பட அவர்களது குடும்பத்தினர் 45 லட்சம் பேருக்கும் அதிருப்தி ஏற்படுமே? என்றும் சுட்டிக்காட்டினார்கள்.
இதனிடையே, நேற்றைய தினம் எத்தனை கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவலை, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அறிவித்திருந்தது.
அந்த உத்தரவில், "1.86 கோடி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, 2,067 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அதில், 239 கோடி ரூபாய் இந்த மாதம் 4ம் தேதி அரசு விடுவித்தது.
ஒதுக்கீடு: மீதமுள்ள 1,828 கோடி ரூபாய் தற்போது ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்க இன்றைய தினம் தமிழக அரசு முடிவு செய்துள்ளதால், பரிசுத்தொகுப்பு பெறுவோர் எண்ணிக்கையும் மேலும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications