சசிகலாவிற்கு எதிரான வழக்கை கைவிட்ட வருமான வரித்துறை.. முடித்து வைத்தது ஐகோர்ட் - என்ன விவரம்?
சென்னை : சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யாத சசிகலாவுக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்திருந்தார்.
மேல்முறையீட்டில் பிறக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

செல்வ வரி வழக்கு
கடந்த 1996-97ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு 2001ஆம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் பதில் அளித்திருந்தார். அந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்த தகவலின் அடிப்படையில், 1996-97ஆம் மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு 4 கோடியே 97 லட்டத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் என தீர்மானித்த வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி, செல்வ வரியாக 10 லட்சத்து 13 ஆயிரத்து 271 ரூபாயை செலுத்த சசிகலாவிற்கு உத்தரவிட்டார்.

சசிகலா மேல்முறையீடு
இதை எதிர்த்து சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்குட்பட்டு மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், 40 லட்ச ரூபாய் கடனை கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை
இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித் துறை ஆணையர் தரப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வாபஸ் பெற்ற வருமான வரித்துறை
வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரித்துறையில் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடர்பான நடவடிக்கையை கைவிடுவதாகவும், அதனடிப்படையில் வழக்குகளை திரும்பப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வருமான வரித்துறை தரப்பில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications