டெல்லியின் 'ஆபரேஷன் இபிஎஸ்' ஆரம்பம்? ஐடி ரெய்டில் சிக்கிய எடப்பாடிக்கு 'நெருக்கமான' ஒப்பந்ததாரர்கள்?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுகவுக்கு எதிரான டெல்லியின் ஆபரேஷன் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம், மண்டபம் கட்டிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களின் வீடுகள் உள்ளிட்ட 100 இடங்களில் நேற்றும் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக திடீரென முறித்துக் கொண்டது. ஆனாலும் பாஜகவும் அதிமுகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்காமல் இருந்து வருகின்றன. இதனால் இந்த கூட்டணி முறிவை திமுக கூட்டணி கட்சிகள் சந்தேகத்துடன் பார்த்தும் வருகின்றன.

திடீரென ரெய்டு: மேலும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான அமலாக்கத்துறை, வருமானத்துறை சோதனைகள் அதிகரித்து வந்தன. இந்த நிலையில் தற்போது வருமான வரித்துறை சோதனைகள் அதிமுக பக்கமும் திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் திருச்சியில் நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.
ஜெ. நினைவிடம் கட்டிய ஒப்பந்ததாரர்: ஈரோட்டில் சிஎம்கே ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 4 இடங்கள், சென்னையில் இதன் கார்ப்பரேட் நிறுவனம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிறுவனம்தான் அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் மண்டபத்தை கட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த நிறுவனம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கம் எனவும் கூறப்படுகிறது. நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி வீட்டில் நேற்றும் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
100க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு: மேலும் ரீன் பீல்ட், ட்ரிநிவியா உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களும் வருமான வரி சோதனையில் சிக்கி இருக்கின்றன. சென்னை, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு என தமிழ்நாட்டின் மொத்தம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக அதிர்ச்சி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களை திடீரென வருமான வரித்துறை இலக்கு வைத்திருப்பது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டதால்தான் இந்த வருமான வரித்துறை சோதனைகளா? என்கிற குமுறலையும் அதிமுகவினர் வெளிப்படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications